Thursday, August 13, 2015

அடியேய்ய் அபர்ணா...

’என்ன சார்.. நேத்தைக்கே முடிஞ்ச இண்டர்வியூக்கு இன்னைக்கு வந்திருக்கீங்க?’ என்ற ஒற்றைக் கேள்வி, என் 450 கிலோ மீட்டர் தொலைவிலான பயணத்தை, ஒரு முழு இரவை, ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை ஜஸ்ட் லைக் தட் இடது கையால் உதறித் தள்ளியது. சென்னை, எப்போதுமே எனக்கு நாராசமான அனுபவத்தை மட்டுமே தந்திருக்கிறது. இப்போழுதும் அப்படித்தானென மனதை தேற்றிக் கொண்டேன். இந்தமுறை கொழுத்தியெடுக்கும் வெயில் இல்லை, மாறாக மெலிதான தூறல் கூடவே வந்து நான்கைந்து தும்மல்களை தந்துவிட்டுச் சென்றது. சில சந்திப்புகள் சில கூத்தடிப்புகள் முடித்து கோட்டை விட்ட இண்டர்வியூவையும் மறந்து மறுநாள் கோயம்பேடு உணவகமொன்றில் அமர்ந்திருந்தபொழுது இரவு மணி பத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது.

ஆரடர் செய்த ஒரேயொரு தோசையும் பொறுமையை சோதிக்குமளவிற்கு நேரம் எடுத்துக் கொண்டதால், மொபைல் டேட்டா ஆன் செய்தேன். அட ஒரு வாரத்திற்கு பின் அபர்னாவிடமிருந்து மெஸேஜ்..

டேய் சாப்ட்டியா??

இன்னும் இல்ல வெய்ட்டிங்..

எங்க இருக்க?

சென்னைல.

சென்னைலையா?? சொல்லவேயில்ல எப்ப வந்த?

நேத்து, ஒரு இண்டர்வியூ. ஸாரிடி நீ சென்னைல இருக்கிறதே எனக்கு மைண்ட்ல... என டைப் செய்து கொண்டிருக்கும்போதே இளையராஜா வயலின் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். அவள்தான் அழைக்கிறாள்.

ஹலோ...

ஏண்டா சென்னை வர்றேன்னு சொல்லவேயில்ல

உன்கிட்ட இருந்து ஒரு வாரமா மெஸேஜே இல்ல, அதுவுமில்லாம நீ சென்னைல இருக்கேங்கிறதே எனக்கு மறந்து போச்சு..

மறக்குண்டா.. இப்ப எங்க இருக்க?

கோயம்பேட்ல, ஊருக்கு கெளம்பிட்டேண்டி

ஹெய் நாளைக்கு போலால.. 

இல்லடி பாப்பா அழறா.. நான் போறேன் அடுத்தவாட்டி வர்றேன்

ஹேய் ஹெ இருடா... நான் பாப்பாக்கு கூட எதுவும் வாங்கித் தரல.. நாளைக்கு பாத்துட்டு அப்டியே பாப்பாக்கு எதாச்சி வாங்கித் தருவேன்ல..

பரவால விடு.. நீ ஒரு முத்தம் கொத்ததா நானே கொடுத்திடுறேன்.

நீ மட்டும் இன்னைக்கு போகாம இரு நான் கண்டிப்பா நாளைக்கு உன்கிட்ட பாப்பாக்கு முத்தம் கொடுத்துவிடுறேன்..

நீ செய்வடி, வேனாம் ஃபோன்லையே கொடு கொண்டுபோய் சேத்துடுறேன்..

உனக்கு ஃபோன்ல கொடுத்தா பிடிக்காதே.. ஃபோன எச்ச பண்ணக்கூடாதுனு பெருசா பீத்திக்குவியே...

அது அப்போ இப்போ கொடு தப்பில்ல

அதெல்லாம் முடியாது நீ இரு நாளைக்கு போலாம்..

இல்லடி கெளம்பனும், இந்த ஊரு எனக்கு பிடிக்கவேயில்ல வெறும் தூசி

ரொம்ப பண்ணாத... நீ ஈவ்னிங்கே சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன், DOG ப்ளீஸ் இருடா..

ஓகேடி தம்பி மொறைக்கிறான் நான் அப்றம் கூப்புற்றேன்.

அழைப்பைத் துண்டித்துவிட்டு, தம்பி கண்களால் கேட்ட கேள்விகளுக்கு, ’நம்புடா அண்ணன் நல்லவண்டா’ மாடுலேஷனில் பதில் சொல்லி, சிகரட், தண்ணி பாட்டில், டாட்டா சம்பிரதாயங்கள் முடித்து பேருந்தேறி ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

வாட்ஸப் செய்திகளிலும், என்னை போக வேண்டாமென்ற வற்புருத்தலும், சிணுங்கள்களும் மட்டுமே இருந்தன. பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எதிர்வீட்டு பெண்ணிடம் க்ளீவேஜ் பார்க்கும் கள்ளத்தனத்தில் என ஃபோனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததால், ‘bye di gud nite' என்று மெஸேஜ் செய்துவிட்டு மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து ஃபோனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

இருந்த அலுப்பிற்கு உடனே தூங்கியிருக்கத்தான் வேண்டும், ஆனால் யாரிந்த அபர்ணா என்பது குறித்து உங்களுக்கு விளக்க வேண்டியிருக்கிறதே. அபர்ணாவை நான் சந்தித்தது ஆர்குட்டில். இப்போது ஆர்குட் என்ற வெப்சைட்டே இல்லை. நானும், அபர்ணாவும் இன்னுமும் இருக்கிறோம். ‘ரொம்ப ஒல்லியா இருக்கீங்க, நல்லா சாப்டுங்க’ இதுதான் அவள் எனக்கனுப்பிய முதல் மெஸேஜ். முதல் மெஸேஜை Hi என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்கிற அடிப்படை கூடத் தெரியவில்லை அவளுக்கு. ’பாக்க ஒல்லியா இருந்தாலும் எகிறி அடிச்சா கில்லி மாதிரி இருப்பேன்’ என ஏதோ குழந்தைத்தனமாய் பன்ச் டைலாக் மாதிரி ரிப்ளை செய்ததாய் நினைவு. ஆர்குட், ஜீடாக், ஃபோட்டொஸ், மொபைல் ஃபோன் என எங்களின் காதல் படு வேகமெடுத்தது. காதல்தான், இருவரும் பகிர்ந்துகொண்ட முதல் மெஸேஜிலேயெ இருவருக்குமே தெரிந்தே இருந்தது, இது இப்படித்தான் முடியும்.


ஆறு மாத காலம் ஃபோன் வெப்பத்தால் வெடிக்குமளவிற்கு காதல் செய்துவிட்ட எங்களின் முதல் சந்திப்பு சென்னையில்தான் அரங்கேறியது. இருக்கிறதென நம்பி உருவிவிட்ட நாற்காலியின் இடைவெளியில் பொலக்கென விழுவோமே அப்படி இருந்தது எங்களது முதல் சந்திப்பு சிரிப்பும், சிலிர்ப்பும் சேர்ந்துகொண்டு. இருவருக்குமே ஒரே மாதிரியான ரசனைதான். பெரும்பாலும், உணவு விஷயத்தில் இது மாறியிருந்தது அதில் எனக்கு திருப்தியும் கூட. மூன்று வார காலமும் மெரீனா, தியேட்டர், மால், ஹோட்டல், சீண்டல், துரத்தல், பொடிநடை, டூவீலர், பேருந்து, ட்ரைன், சில்மிஷங்கள், உரசல், முத்தங்கள், ஊடல், இடையில் ஒரு இரவு பாண்டிச்சேரி, அன்பளிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டியா? ஃபுல்ஹேண்ட் ஷர்ட் போட்டா டக்கின் பண்ணு போன்ற அக்கறைகள், அழகு குறிப்புகள், ஃபோட்டோ, கைவிரல் கோலம், நகம் வெட்ட அறிவுருத்தல், கேலிகள், சின்னச் சின்ன அழுகைகள், அசாதரண சூழ்நிலையில் சட்டென நிகழும் சுவாரஸ்யங்கள், வெட்கப் புன்னகை, தீராத தாகம் என எல்லாமுமே இருந்தன. எல்லாமுமே எனில் எல்லாமுமேதான்.

ஆரத்தழுவி உச்சி முகர்ந்து அபர்ணா என்னை வழியனுப்பிய அந்த நாளிற்குப் பிறகு அவளைச் சந்திக்கவேயில்லை. இன்னும் ஒருமுறையேனும் சந்தித்திருக்க வேண்டும். இமி அளவும் ஈர்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டோம். இடையில் எனக்கு இன்னொரு காதல் வேறு. வந்த காதல் எதையுமே ஏற்றுக்கொள்ள நான் தயக்கம் காட்டியதே இல்லை. காதல் சொல்லும் பெண்களை பறவைகளை அணுமதிக்கும் ஒரு மரத்தைப் போல் அரவணைத்துக் கொள்கிறேன் ஏனெனத் தெரிவதில்லை. அதனாலயே என் நிலை மிகவும் திண்டாட்டமாய் ஆகி விட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல இருவருக்குமே ஃபோன் காதல் சலிப்படைய தொடங்கியது. இரண்டொருமுறை சந்திப்பிற்கான சூழ்நிலை அமைந்தும் எதன் உந்துதல் பொருட்டோ நானதை தவிர்த்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டிருந்தன. வெகு லாவகமாய் இருவருமே தொடர்பு எல்லைக்கு அப்பால் வந்துவிட்டோம். கிட்டத்தட்ட மறந்தேவிட்ட அவள் முகத்தையும், மெயில் ஐடியையும் நினைவில் நிறுத்தி, என் திருமண பத்திரிக்கையை அனுப்பினேன். அவளுக்கு திருமணம் முடிந்திருக்கும் எனவே நம்பியிருந்தேன். ஆனால் அது அப்படி இருக்கவில்லை.

‘call pannu' என ரிப்ளை செய்து கூடவே அலைபேசி எண்ணையும் அனுப்பியிருந்தாள். வாழ்த்து சொல்லத்தான் போகிறாள் என நினத்தால்.. காச்மூச்சென்று கத்தத் துவங்கி விட்டாள். ‘பாக்குறண்டா.. உன் கல்யாணம் எப்டி நடக்கும்னு, என்னய மறந்துட்டெள.. வர்றண்டா நேரா வீட்டுக்கே வர்றேன்’ என்று ஏதேதோ சொன்னாள். நினைவிலில்லை. தாலி கட்டும்வரை பயந்துகொண்டேதான் இருந்தேன். திருமனம் முடிந்த மறுநாள் காலை அழைத்து, வாழ்த்துக்கள் என்றாள். அவ்வப்போது மெயில் செய்வாள். பின் தொடர்ந்து மெயில் செய்தாள். face book சாட்டிங்கில் பிஸியானோம். திருமணத்திற்கு அழைத்தாள். நினைவிருக்கிறது, மங்காத்தா ரிலீஸ் அன்றுதான் அவள் திருமனமும். மங்காத்தாதான் சென்றேன்.

திடீரென கால் செய்து, கனவனுக்கு வேலை போய்விட்டதெனவும், இவள் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறதெனவும், மாமியார் கொடுமைகள் பற்றியும் சொல்லி அழுதாள். இன்னும் குழந்தையில்லை என்றாள். வாட்ஸப் வந்தபின் தினமும், குட் மார்னிங், குட் ஈவ்னிங், குட் நைட், சாப்டாச்சா, எங்க இருக்க?, என்ன பண்ற?, ஊருக்கு வர்றியா?, மாரி பாட்டு கேட்டியா?, குளிச்சியா?, என்ன சோப்பு?, என்ன கலர் சட்டை?, மீசை ஷேவ் பண்ணலையா?, என்பது போல் மெஸேஜ் செய்துகொண்டே இருப்பாள். ஐந்து நாட்கள் அவளிடமிருந்து எந்த செய்தியுமில்லை. அதனாலையே நான் சென்னை செல்வதை அவளிடம் தெரிவிக்கவும் தோன்றியிருக்கவில்லை.

சத்தங்களும், கண்ணில் பட்ட வெளிச்சமும் தூக்கத்தை கலைத்துவிட்டது. பேருந்து திருச்சி எல்லைக்குள் இருக்கிறது. ஃபோனை எடுத்து மொபைல் டேட்டா ஆன் செய்தேன். அட, அவளிடமிருந்து இன்னொரு மெஸேஜ்,’டேய் நாம ஏன் இன்னொருவாட்டி காதலிக்க கூடாது?’

பேருந்து, நிலையத்தை அடைந்து நின்றுவிட்டது. நான், சுற்றிலும் தேடி இடது பக்கமிருந்த நவீன கட்டணக் கழிப்பறையை நோக்கி சற்று வேகமாய் எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தேன்...




12 comments:

  1. இதுலாம் நம்பற மாதிரியனே இருக்குனு கேக்க தோனுது ஆனால் அனுபவம் தடுக்குது.அருமை அண்ணே

    ReplyDelete
  2. நான் மட்டும் தான் இப்படினு நினைச்சுகிட்டு இருந்தேன்.... நாட்ல நிறைய பேர் இருக்காங்க போல... பல இடங்களில் எழுத்து நடை ரசிக்கும் படி இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. +1.. என்ன இன்னும் கல்யாணமாகல அம்புட்டுத்தேன்

      Delete
  3. //இடையில் எனக்கு இன்னொரு காதல் வேறு. வந்த காதல் எதையுமே ஏற்றுக்கொள்ள நான் தயக்கம் காட்டியதே இல்லை. காதல் சொல்லும் பெண்களை பறவைகளை அணுமதிக்கும் ஒரு மரத்தைப் போல் அரவணைத்துக் கொள்கிறேன் ஏனெனத் தெரிவதில்லை. அதனாலயே என் நிலை மிகவும் திண்டாட்டமாய் ஆகி விட்டிருந்தது.//

    இப்படி சில இடங்கள்ல ரிலேட் பண்ணிக்க முடிஞ்சாலும்.. அந்த கடைசி வரி செம...

    ReplyDelete
  4. கல்யாணத்துக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை. கல்யாணம் வரை இளைப்பார காதல்.

    ReplyDelete
  5. Excellent narration! :) Enjoyed a lot!! All the very best thambi! :)

    ReplyDelete
  6. //வந்த காதல் எதையுமே ஏற்றுக்கொள்ள நான் தயக்கம் காட்டியதே இல்லை. //
    இதை தவிர்த்து எல்லாமே என் வாழ்க்கை கோயின்சிடன்ஸ்..எஃசெப்ட் கல்யாணம்..:-)
    செம டச்.. :-)

    ReplyDelete
  7. எழுத்துக்கள் ரசிக்கும்படியாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Enjoyed every bit. Keep writing a lot.

    ReplyDelete

அடிச்சு.... துவைங்க....