Sunday, September 23, 2012

ஒரு ப்ளேட் பிரியாணியும், ஒரு (சைடு) ப்ளேட் காதலும்

அவளுடனான சந்திப்பு நிகழ்ந்தது ஒரு பயணத்தில். பயண சந்திப்பில், எழுதும் அளவிற்கு விஷயம் உண்டெனில் அது ரயில் பயணம்தானே. இதுவும் ஒரு ரயில் பயணம்தான். எதிரில் அமர்ந்து குமுதம் படித்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியை மாருதி வரைந்திருந்தால், எனக்கு வர்ணிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அப்படியான ஒரு மாருதி வரையும் பெண்ணின் ஓவியம் போல் இருந்தாள். வட்டமான முகம் மாநிறத்துக்கு கொஞ்சம் மேல், கீழ் உதடுக்கு கீழே வலது புறமா சற்றே பெரிய அளவிலான மச்சம் ஒன்றிருந்தது. அது மச்சமாகவும் இருக்கலாம், மருவாகவும் இருக்கலாம். யார் கண்டது அவள் அழகின் ஒரு மிச்சமாகக் கூட இருக்கலாம். கொஞ்சம் பூசின மாதிரியான உடலைப்பில், சரியான அளவிலான அங்கங்களை பெற்றிருந்தாள். பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள், நெற்றியில் சின்னதாய் வட்டமாய் ரத்த நிறத்தில் ஒரு பொட்டு, தலைமுடி நெற்றியில் இருந்தே ஆரம்பித்து இருந்தது அதனை இழுத்துப் பிடித்து ஒற்றைப் பின்னலில் அடக்கி இருந்தாள். எத்தனை நேரம்தான் அவளை பார்த்துக்கொண்டே இருப்பது ரயிலைப்போல் கதையும் நகர வேண்டுமே... ஒரு சிறிய கனைப்பைச் சிந்தி இருப்பை காட்டிக்கொண்டு மெல்லமாக ஆரம்பித்தேன். 

எங்க, இது எந்த ஊரு நீங்க?

புத்தகத்திலிருந்து கண்ணை வெளியே எடுத்து சரியாக அரை வினாடி என்னைப் பார்த்தாள். என்ன நினைத்தாலென்பது அறிய முடியவில்லை. மீண்டும் புததகத்தினுள் தலை விட்டுக்கொண்டே சொன்னாள்,

இறங்கின பின்னாடி, பின்னாடிய வாங்க வீடு வரைக்கும் தெரிஞ்சுக்கலாம்...

ஓ கண்டிப்பா வர்றேன், வேற ஏதாவது புக் இருக்கா??

இருக்கு, உங்களுக்கு தர்ற மாதிரி ஏதும் ஐடியா இல்ல ...

வேற என்ன மாதிரி ஐடியா வச்சுரிக்கீங்க??

.........

ஹலோ உங்களத்தாங்க ...

உங்களுக்கு இப்ப என்னங்க வேணும்? கொஞ்ச நேரம் அனத்தாம வாங்களேன்.....

புக் ஏதும் இருக்கானு கேட்டேன் இல்லைன்னு சொல்லிட்டீங்க, சாப்ட ஏது வச்சுருக்கீங்க?? பிஸ்கட் பழம் இந்த மாறி

..................

தனியாவா போறீங்க திண்டுக்கல் வரைக்கும்....

இந்தக் கேள்வி அவளுக்கு ஒரு தற்காலிக பதற்றத்தை தந்திருக்க வேண்டும்

அட... நான் திண்டுக்கல்னு எப்டி கண்டு பிடிச்சீங்க???

ஒ நீங்க திண்டுக்கலா?? இதெல்லாம்  முல்லா  காலத்து டெக்னிக் பிரியா....

என் பேரு ப்ரியா இல்ல "அபர்ணா"

ஒ... பேரு நல்லா இருக்கு யாரு வச்சாங்க??

தெரிஞ்சுகிட்டு, என்ன செய்ய போறீங்க??

ஆமால... என் பேரு இந்திரன்

உங்க முகத்துக்கும் இந்த பேருக்கும் கொஞ்சம் கூட ஒட்டவே இல்ல...

ஒட்டுதோ இல்லையோ இதுதான் என் பேரு......

சும்மா சொன்னேன், நீங்க எந்த ஊரு??

நானும் திண்டுக்கல்தான்..  எங்க படிச்சீங்க??

இம்மாதிரியாக தொடர்ந்த உரையாடலில், அவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டாள். வாயைத்தான் மூட மறந்துவிட்டாள். ஊர் வந்து சேரும்வரை உரையாடலை நிறுத்த மனமில்லாமல் பேசிக்கொண்டே வந்தோம். அவ்வப்போது இடையூறு செய்த மௌனங்களையும் சட்டென்று உடைக்க ஏதோவொரு ஜன்னல் வழிக் காட்சி துணை புரிந்தது. அருகில் இருந்த ஆட்களையெல்லாம் கவனித்து எங்கள் பேச்சின் சுவாரஸ்யத்தை போக்கிக்கொள்ள இருவருமே விரும்பவில்லை. அப்படி ஒன்றும்  சுவாரஸ்யமான பெண் இல்லைதான் என்றாலும் பெண் என்ற ஒற்றைத் தகுதி போதாதா, நமக்கு சுவாரஸ்யம் ஏற்ப்பட! ஆனது ஆகட்டுமென கேட்டே விட்டேன்.

உங்க நம்பர் என்ன?

இதற்காகவே காத்திருந்ததுபோல் மடமடவென அவள் நம்பரை ஒப்பித்துவிட்டு மறக்காமல் மிஸ்ட் கால் தரச் சொல்லி என் நம்பரையும் பத்திரப் படுத்திகொண்டாள். அடுத்து வந்த நாட்களில் கால், எஸ்எம்எஸ் என 24 மணி நேரத்தில் கணிசமான நேரத்தையும் பணத்தையும் அந்த நம்பருக்கு செலவழிக்க வேண்டியிருந்தது. சில நாட்கள் கடந்த பின் மீண்டும் அவள் சென்னை செல்வதாய் இருந்தது. மாதம் 25,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அவளுக்கு அங்கே வேலையிருக்கிறது செல்கிறாள். அப்போதுதான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஊர் சுத்திக் கொண்டிருக்கும் சென்னை செல்ல எனக்கென்ன வந்தது, ஆனாலும் சென்றேன். ஒரு பெண் அழைக்கிறாள், தவிர்த்துவிட எந்த மடையனுக்கு ஒவ்வும்.

அவள், நீயும் வாயேன் சென்னை வரைக்கும்..

வந்து என்ன செய்றது? என்ட்ட தம்மடிக்க கூட காசில்ல.. இதுல சென்னையாம் போடி..

அடப்பாவி, எரும மாடு நீ சிகரட் பிடிப்பியா?

ஹ்ம் பிடிப்பேன் ஆனா காசில்லாத போது பிடிக்கிறதில்ல...

மொதல்ல அந்தக் கருமத்த விட்டுத் தொல அந்த வாடை வந்தாலே எனக்கு குமட்டிட்டு வரும் உவ்வே...

சரி கெடக்குது... நீ எப்போ சென்னை போற?

வர்ற  பன்னெண்டாந்தெதி, நீயும் வா நான் டிக்கட் புக் பண்ணிடுறேன்... பழைய துணிக்கு பாத்திரம் விக்கிறவனாட்டம் எங்கயாவது ஊர் சுத்த போய்த் தொலைச்சுறாத

நீங்க, வாங்க, போங்க என்ற மரியாதையான வார்த்தைகள் மறைந்து, போடா, போடி, எரும, லூஸு என்ற ஆர்மார்த்தமான வார்த்தைகளுக்குள் அழகாக சிக்கிக் கொண்டோம்.

சென்னை செல்ல முடிவெடுத்தாகி விட்டது. அரசு குளிர்சாதன பேருந்தில் டிக்கட் புக் செய்திருந்தாள். அவள் வீட்டிலிருந்து வழியனுப்ப பெருங்கூட்டமொன்று வருமென நம்பியிர்ந்த எனக்கு, தனியாக ஒற்றை பைய்யோடு அவள் நடந்து வந்தது அதிசியமாயிருந்தது. இதில் இருக்கும் இன்னொரு ஆச்சர்யம் இரண்டு வாரம் முன் பார்த்த ஒருத்தி எந்த சம்பந்தமும் இல்லாமல் பழக ஆரம்பித்து, அவளுடன் தனிமையில் ஒரு பயணம் அதுவும் இரவில். பசி வேறு எடுக்கிறது.

சாப்டியா?, வயிற்றில்தான் பசிக்கிறது என்றாலும் முகம் காட்டிக் கொடுத்துவிடும் போல

இன்னும் இல்ல எப்டியும் நீ வாங்கி தருவேன்னு தெரியும் அதான் மத்தியானத்து இருந்து சாப்டாமலே இருக்கேன்.

அய்யே மூஞ்சிய பாரு... சரி வா சாப்ட்டு வல்லாம், இன்னும் டைம் இருக்கு

மணி அப்போது இரவு ஒன்பது இன்னும் 45 நிமிடம் இருந்தது. நடக்க ஆரம்பித்தோம், வழக்கத்திற்கு மாறாக ரொம்பவே அமைதியாக இருந்தாள். பஸ் ஸ்டேன்ட்டிலும் பெரிதாக கூட்டமில்லை. எதிர்ப்படும் ஒரு சில பிச்சைக் காரர்கள் தவிர்த்து பயணிகளும் சொற்பமே. பாப்பாவுக்கு "பூ" வாங்கிக் கொடுப்பா என்ற ஒரு பூக்கார பாட்டி பூவினை நீட்டியவாறே சொல்ல, நான் அவளிடம், "வேணுமா" என்பது போல் பார்த்தேன். அவள் 'வேண்டாம்' என பார்வையிலேயே மறுத்துவிட்டு நகர்ந்தாள். தம்மடிக்கவே காசில்லாத உன்னிடமேல்லாம் பூ வாங்கித் தரவா காசிருக்கப் போகிறது என நினைத்திருப்பாளோ என்னவோ. எதையோ சிந்தித்தவாறே வந்து கொண்டிருந்த அவளின் பேரமைதி எனக்கு அந்நியமாய் பட்டது. தலைக்கு என்ன ஷாம்பூ யுஸ் பண்ற? பச்சை மிளகாய விட சிகப்பு மிளகா கொஞ்சம் காரம் ஜாஸ்த்திதான் இப்டி ஏதேதோ பேசி அவளை திசை திருப்ப முயன்று தோற்றேன். சாப்பிட்டு வருவதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. அவசரமாய் போய் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மீண்டும் அவள் முகத்தில் பழைய மின்னல் தெறித்தது. இந்தமுறை படிப்பதற்கென்று புத்தகம் எதுவும் அவள் வாங்கிக் கொள்ளவில்லை. ஜன்னல் ஓர இருக்கையில்லாமல்தான் இவ்வளவு நேரம் இத்தனை இறுக்கமாக இருந்தாளா அல்லது ஜன்னல் இருக்கை அவளுக்கு பழைய உற்சாகத்தை அளித்ததா என்பது பற்றி தெரியவில்லை. அவள் கண்களில் பளிச்சென சில மின்னல்கள் அவ்வப்போது மின்னிக் கொண்டிருந்ததை கவனித்தேன். அவளை பேச விட்டு வேடிக்கை பார்ப்பது நன்றாக இருந்தது. புதிதாக ஒன்றும் பேசவில்லைஎனினும், பெண்கள் பேசும்போது அவர்களின் கைகள், கண்கள் ஒவ்வொன்றையும் பார்த்து ரசிப்பது எவ்வளவு சுகமானதென்பது ஆண்களுக்கு மட்டுமே தெரியும்.   சிறிது சிறிதாக சத்தம் குறைத்து இறுதியில் ஹஸ்கி குரலில் அவள் பேசியது அழகான ஹைக்கூ. புரியாத எதையும் நான் ஹைக்கூ எனவே கொள்வது வழக்கம்.

திருச்சி தாண்டி இருந்தோம். வழியில் நிறுத்தும் போது நான் மட்டும் இறங்கி ஒரு வில்ஸ் பற்றவைத்து அடித்துப் பின் வாயில் ஹால்ஸ் போட்டுவிட்டு வந்தேன். மோப்ப சக்தியில் மிதமிஞ்சிய திறமை கொண்டவள் போல உடனே கண்டுபிடித்துவிட்டாள். அடுத்தமுறை பாஸ் பாஸ் போட்டுக் கொள்ளவேண்டும். சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கிப் போனாள். என் தோளில் வெகு சகஜமாய் சாய்ந்து படுத்திருந்தாள். எனக்கு தூக்கம் வரவில்லை. சிறிது நேரத்தில் அவள், தலையை என் தோளில் மெல்ல அழுத்தி ஒரு மாதிரி ஆட்டிக் கொண்டே தோளில் இருந்து முன்னேறி என் கன்னம் வரை வந்து விட்டாள். பின் அவள் மூக்கு நுனியால் கன்னத்தில் இட வலமாக தேய்த்துவிட்டு மீண்டும் தூங்கிபோனாள். இதை அவள் தூக்கத்தில் செய்தது போல் தோன்றவில்லை. ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல் காட்டிக் கொண்டிருந்தாள். மெல்லிய மிக மெல்லிய புன்னகையொன்று இருந்தது. மெல்ல மெல்ல இன்னும் அழகாகிக் கொண்டே இருக்கிறாள். திடீரென முதுகில் ஒரு மாதிரி ஊர்ந்தது. காதல் எதுவும் வந்துவிட்டதா எனக்கு? அதற்கு வயிற்றில்தானே பட்டாம்பூச்சியோ, மண் புழுவோ ஊறவேண்டும்? இது என்ன முதுகில்? அவளை தொந்தரவு செய்யாமல் நானே நெளிந்து முதுகை கூடுமானவரை சோதனையிட்டதில் மூட்டைப்பூச்சி கடித்திருப்பதை உணர்ந்தேன். இனிமேல் உடலில் என்கேநுண் திடீரென ஊர்ந்தால் காதல் மட்டுமல்ல மூட்டைப்பூச்சி கூட வந்திருக்கலாம் என்பதை அறிந்துகொண்டேன். அண்டே இருந்தன. அடிபட்ட பாம்பு போல் நான் கொஞ்சம் நெளிந்து கொண்
வள் குறும்புகளும் சின்ன சின்ன உரசல்களும் சென்னை வரை தொடர்ந்து கொடேதான் பயணம் செய்து கொண்டிருந்தேன். 

சென்னையில் விடிந்து விட்டிருந்தது. என் தம்பி எனக்காக காத்திருந்தான், அவளுக்கு யாரும் காத்திருக்கவில்லை. பழகிய சென்னையில், அனாசியமாய் புகுந்து  டாட்டா காட்டி விட்டு ஒரு பேருந்தேறி அந்தக் கூட்டத்தில் கலந்தாள். ஒரு வாரம் நான் சென்னையில்தான் இருந்தேன். வர்ற புதன் கிழமை ஆபிஸ் லீவுதான் வர்றியா ?? லஞ்ச முடிச்சுட்டு போலாம் என்றாள். பிரியாணி  என்றால் வருவதாய் சொன்னேன்.

சென்னையில் பைக் ஓட்டுவது கணக்கு பரீட்சை எழுதுவது போல் ரொம்பவே கடினமாக இருந்தது. பூந்த மல்லியிளிருந்து  இரண்டு மணிக்கு கெளம்பி வேளச்சேரி வந்து சேர்வதற்குள், மணி மூன்றாகி விட்டிருந்தது. பின் அவள் இருப்பிடம் அடையாளம் தேடி அலைந்து, அடித்த வெயிலில் நான் சற்றுக் கருகி போய்விட்டேன், சந்தனக் கலர் சுடிதார் அவளுக்கு அவ்வளவு எடுப்பாய் இல்லை. சரியான பசி என்பதால், இப்போதைக்கு அவளை என்னால் வர்ணிக்கவும் முடியவில்லை. 

இதுதான் ரெண்டு மணியா?? என்றாள். வார்த்தைகளில் கோபம் காட்ட முயன்றவள் கண்களில் தோற்றுப்போனாள்.

வா ஹோட்டல் உள்ள போயிட்டு பேசிக்கலாம், என்றேன் அவசரமாக. என் பசி எனக்கு. கொஞ்சம் பணக்காரத்தனமான ஹோட்டல். இங்கும் ஏ சி. மூட்டை பூச்சி இல்லாமல் இருக்க வேண்டும் முதுகில் குறுகுறுத்தால் காதல் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. எதிரெதிரே அமர்ந்து கொண்டோம். கொஞ்சம் அதிகப்படியான மேக் அப்புடன் இருந்தாள். அவள் கண்கள் ஒரு பரவசத்தையோ, பிரளத்தையோ, பிரியானியையோ எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. என் பாக்கெட்டில் மூன்று ரூபாய் இருக்கிறது. வரும்போதே ஒரு கடையை பார்த்து வைத்திருக்கிறேன். திரும்ப போகும்போது அதே கடையில் ஒரு வில்ஸ் வாங்கி பற்ற வைத்துக் கொள்ளவேண்டும். தடவிப் பார்த்துக் கொண்டேன். 

அவள் மெனு கார்டை புரட்டிக்கொண்டே, என்ன சாப்டுற???

ஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி, ஒரு  பெப்பர்  மட்டன் போதும்.  உனக்கு??

எனக்கு ரெண்டு சப்பாத்தி போதும். என்றவள், தொடர்ந்தாள்.

இந்த டைம்ல வந்திருக்கோம் மணி மூன்ற ஆவுது எப்டியும் ஆறிப் போய்தான் இருக்கும் நீதான் லேட் பண்ணிட்ட பன்னி

சரி விடு எப்டியும் இன்னொருவாட்டி பிரியாணி வாங்கித்தர்றேன் வான்னு சொல்லாமலா போய்டுவ... அப்ப சரியான டைம்க்கு வந்துடுறேன்.

பிரியாணியும் சப்பாத்தியும் ஒரே சேர வந்தது. எனக்கிருந்த பசியில் சடாரென கைகளை சுறுசுறுப்பாக்கி பிரயாணி மேல் பாயத் துவங்கினேன். அவளும் அதை ரசித்திருக்க வேண்டும். மெதுவாடா யாரும் வந்து அத பிடுங்கி தின்னுடா மாட்டாங்க பொறுமையா சாப்டு, தொடர்ந்தாள்

இந்திரா, எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, உன்ன காதலிக்க தோணுது, உன்ன கல்யாணம் செய்துக்க தோணுது, எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நீ என்ன சொல்ற???

சொல்லியே விட்டாள். அவள் கண்களில் ஆகப்பெரும் தன்னம்பிக்கை தெரிந்தது. படபடப்போ, பதற்றமோ எதுவும் இல்லை அவளிடம். மிகத் தெளிவான முகத்துடன் இதைச் சொன்னாள். சின்ன ஆர்வமும் மிகக் கொஞ்சமான வெட்கத்தையும் அவள் இயல்பையும் தாண்டி வெளிப்படுத்தியிருந்தாள். என் ப்ளேட்டுக்கும் வாய்க்கும் இடையில் இருந்த கையில் கொஞ்சமாய் பிரியாணி வைத்திருந்தேன். அதில்தான் இந்த காதல் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான், இல்லை அதுபோலெல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்லப் போய் அவள் பாட்டுக்கு கோபித்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டால், என்னிடம் இருப்பது மூன்று ரூபாய், வெறும் மூன்று ரூபாய் அதுவும் வில்ஸ் அடிப்பதற்கு, வண்டியில் கொஞ்சம் பெட்ரோல் அவ்வளவே என்ன சொல்வது, என்ன செய்வது.....

சில்லென்று இருந்த பிரியாணியை தடவிக் கொண்டே சொன்னேன்,

பிரியாணி ஆறிடும்... சாப்ட்டு முடிச்சுட்டு சொல்றேனே...

12 comments:

  1. நல்ல வேள, இத படிச்சி உஷார் ஆய்ட்டேன். இனிமே பொண்ணுங்க கூட ஹோடல்க்கு போன கைல காசோட தான் போகோனோம்.

    ReplyDelete
  2. alaga vanda story ah comedy panittengalae boss.... climax mokka!!

    ReplyDelete
  3. ஹஹா நன்றி பாஸ்.... அடுத்தமுறை எழுதும்போது க்ளைமேக்ஸ்ல கவனம் செலுத்துறேன் :)

    ReplyDelete
  4. Supper. Like it very well keep rocking bozzz..

    ReplyDelete
  5. Climax is high light...gud conversation dialogues...keep the gud work..

    ReplyDelete
  6. Climax is high light...gud conversation dialogues...keep the gud work..

    ReplyDelete
  7. என் இனம்ங்க நீங்க :-) அந்த பொண்ணு அடிக்காம விட்டது உங்க நல்ல நேரம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா சிரிச்சுக்கிட்டே மொதல்ல தின்னு முடின்னு சொல்லிட்டா :))

      Delete

அடிச்சு.... துவைங்க....