Thursday, August 29, 2013

டைட்டில் இன்னும் வைக்கலீங்க...


சமீபத்தில் போக்கிரி மாமன் பேஸ் புக் தளத்தில் எழுதிய அப்பா குறித்த பதிவொன்றை படிக்க நேர்ந்தது. இது அப்பாவை பற்றிய இன்னுமொரு செண்டிமெண்ட் பதிவோ... என உங்கள் கண்களில் தெறிக்கும் பீதியை என்னால் உணர முடிகிறது. இது அதுவல்ல, நம்பிக்கையோட அடுத்த வரிக்கு வந்துவிடுங்கள். அதிகாலை என்றவுடன் நம் மனத்தில் தோன்றும் காட்சிகள் என சில இருக்கும். செந்நிறத்தில் சூரியன் உதிப்பது அதன் நடுவே இரண்டு புறாக்கள் பறப்பது, சூரிய ஒளி பட்ட ஆற்று நீர் பளபளப்பாய் மின்னுவது, மரங்களுக்கிடையில் வெளிச்சம் பாய்வது, நம் நிழல் முழு உருவம் அடைவது போன்றவையும் இன்ன பிற காட்சிகளும் அதில் அடங்கும். அப்பா என்றவுடன் என் நினைவிற்கு சட்டென வந்து மறைவது அதிகாலைதான். மனிதர் ஐந்து மணிக்கு மேல் தூக்கத்தில் இருந்து நான் பார்த்ததே இல்லை. இயக்குனர் பாலாவிடம் அவரின் குருநாதர் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னாராம், 'உலகத்துல ஜெயிச்சவன் பூராம் காலைல சீக்கிரம் எந்திரிச்சவண்டா' அப்டின்னு. அப்பா ஜெயித்தாரா தெரியாது ஆனால் தோற்கவில்லை. அலாரச் சத்தத்தில் இசைய உணர எம் எஸ் சுப்பு லக்ஷ்மி அம்மாவிற்கு கூட முடிந்திருக்காது. நாம் சொன்ன வேலையை மிகச் சரியாக செய்தும் நம் அதிருப்திக்கு உள்ளாகும் ஒரே ஜீவன் உலகில் அலாரம் செட் செய்யப்பட்ட கடிகாரமாய்த்தான் இருக்கும். தீபாவளி அதிகாலையை போன்ற குரூர தண்டனையை கருட புராணத்தில் எப்படி சேர்க்காமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. அன்றைய பொழுது மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் எழுப்பி விட்டு விடுவார்கள். உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை தேய்த்து, தேமேவென்று குறைந்தது அரை மணிநேரம் அமர்ந்திருக்க வைப்பார்கள். அதிலும் பாசக்கார அப்பா அவரே குளிப்பாட்டியும் விடுவார். ஒற்றை உள்ளாடையுடன் அப்பாவுடன் நிற்பதற்கு எனக்கு நிரம்பவே கூச்சமாய் இருக்கும். நான் பத்தாவது முடிக்கும்வரை அவருக்கு இது புரியவே இல்லை. பண்டிகை கொண்டாட்டங்களை அதிகாலையில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதை யார் கண்டுபிடித்தது தெரியவில்லை. எனக்கெல்லாம் பண்டிகை நேர அலாரம் பெரும்பாலும் கிரைண்டர் சத்தமாகவே இருந்திருக்கிறது. கைக்குழந்தை இருக்கும் வீட்டிற்கு தனியே அலாரம் என்னும் வஸ்துவின் தேவை இருப்பதில்லை. குழந்தையை அலாரமாக பயன்படுத்துவதில் ஒரே ஒரு சிக்கல், நாமாக நேரத்தை செட் செய்ய முடியாது. ஆனாலும் குறித்த நேரத்திற்கு முன்பே எழுந்து கொள்ளலாம். பக்கத்து வீட்டுக்காரர்களையும் சேர்த்தே எழுப்பிவிடும் திறனும் அவர்களுக்கு உண்டு. 

பாட்டி வீட்டில் இந்த அதிகாலை கலாச்சாரமெல்லாம் கிடையாது. பசங்க எழுந்திருக்கும் நேரம்தான் அவர்களவில் அதிகாலை நேரம். எட்டரை மணிக்கு பள்ளிக்கு செல்லும் வழியில் கணக்குபிள்ளை தாத்தா சூர்ய நமஸ்காரம் செய்து கொண்டிருப்பார். இடது பக்கமாக மூன்று சுத்து, அப்படியே வலது பக்கமாக திரும்பி மூன்று சுத்து. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டவாறே அவர் அவ்வாறு சுற்றுகையில், குடையில்லா ராட்டினம் சுற்றுவது போலிருக்கும். பின்னாளில் சூர்ய நமஸ்காரம் என்பது அதிகாலை சூரியன் எழும்போது செய்வதென்பதும், யோகா கற்றுக்கொள்ள சென்றபோது சூர்ய நமஸ்காரம் செய்வதென்பது கைகளை உயர்த்தி இட வலமாக உடம்பை சுற்றுவது மட்டுமே இல்லையென்பதையும் தெரிந்து கொண்டேன். ஏமாற்றுக்கார கணக்குப்பிள்ளை தாத்தா, தானும் சூர்ய நமஸ்காரம்தான் செய்வதாய் ஊரையே நம்ப வைத்திருக்கிறார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சூர்யோதயத்தை காண்பது அவ்வளவு திவ்யமாய் இருக்குமென கேள்விப்பட்டதோடு சரி இதுவரை நான் பார்த்ததில்லை. காலையில் எழுந்து ஜாக்கிங் செல்ல முடிவு செய்து கிரவுண்டிற்கு செல்லாமல் சாலையில் ஓடினால் சாலையோர பெண்களின் கண்களில் தட்டுப்படலாம் என்ற நப்பாசையில், ஓடுவதற்கு சாலையை தேர்ந்தெடுத்து, நாய்கள் துரத்த ஜாக்கிங்கை ரன்னிங்காய் மாற்றியதுதான் மிச்சம். நான் எத்தனை முறை நாய்களால் துரத்தப் பட்டிருக்கிறேனோ.. அதை விட குறைந்த எண்ணிக்கையிலான செஞ்சுரிகளையே சச்சின் அடித்திருப்பார்!


முந்தைய இரவு அளவுக்கு அதிகமான ஆல்கஹால் அடித்திருந்தால், அடுத்த நாள் அதிகாலை பாறாங்கல்லை தலைக்குள் பொருத்தியிருப்பது போன்ற பிரமையை தரும். உடனுக்குடன் சூடாக சில பல இட்லிகளையோ, உப்புக் கரைசலில் எலுமிச்சை சாறு சேர்த்தோ வயிற்றை நிரப்பும்வரை கல் இறங்காது. பள்ளி காலத்து காலை நேரமெல்லாம் ஸ்கூல் பஸ்  பிடிக்க ஓடியதிலேயே கடந்துவிட்டது. இப்போதுவரை பஸ் கிளம்பும் கடைசி நிமிடத்திற்கு முன் பஸ் ஸ்டாப்பில் நிற்பது அரிய நிகழ்வாகவே நடக்கிறது. முதுகில் புத்தக மூடை இல்லையெனினும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஓடி தொரத்தித்தான் பஸ் ஏற வேண்டியிருக்கிறது. கல்லூரி காலத்தில் எங்களுக்குள் துளிர் விட்ட விபரீத ஆசையொன்றை நிகழ்த்திப் பார்க்க வெகு சீக்கிரமே கல்லூரி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வேறொன்றுமில்லை பெண்களுக்கென்று தனியே அமைந்திருக்கும் பிரத்யேக கழிவறை எவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தோம். ஆளாளுக்கு ஒவ்வொரு கற்பனையை சொல்ல, எதற்கு வம்பென்று, நேரில் சென்று பார்த்து தீர ஆராய்ந்த பின் உறுதி செய்ய முடிவானது. அதற்காகத்தான் இந்த வெகு சீக்கிர அட்வஞ்சர் முயற்சி. காவலுக்கு ஒருவனை படியிலேயே நிறுத்திவிட்டு நாங்கள் நால்வர் மட்டும் உள்ளே சென்றோம். கால்கள் நடுங்கியபடியேதான் இருந்தது. பெரிய வித்தியாசமில்லை, சுமதி மேடத்தை திட்டி இந்த சுவற்றிலும் கிறுக்கியிருந்தார்கள். காவலுக்கு நின்றவன் சத்தம் கொடுக்கவே இடத்தை காலி செய்தோம். வெளியில் ஹாஸ்டல் பெண்கள் அனைவரும் மெல்லிய நைட்டியில், ஜடை பின்னியும் பின்னாத முழுக்க விரித்தும் போடாமல், அள்ளியும் முடியாமல் ஒருமாதிரி கேசத்தோடு, வாயோரம் வடிந்து விட்டிருந்த ஜலவாய் அடையாளம் தெரியும்படி, ப்ரஷ், பேஸ்ட், துண்டு சகிதம் சர்வ சாதாரணமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர். தேவதைகளுக்கு சாத்தான் வேஷமும் பொருந்தித்தான் போகிறது ! எங்களை கண்டதும் சின்ன மிரட்சி காட்டி, தேன் மொழிதான் கேட்டாள், 

என்னங்கடா இந்த நேரத்துல?? ... 
கேண்டீன்ல போண்டா போடுறதுக்கு என்ன எண்ணெய் யூஸ் பண்றாங்கன்னு பாக்க வந்தோம்.... நீங்க என்னடி இவ்ளோ காலைல இங்க??   
ஹாஸ்டல்ல தண்ணி வல்லடா அதான் இங்க வந்தோம்...
முன்பே தெரிந்திருந்தால், பாத் ரூமில் மறைவிடம் தேடியிருக்கலாம் பச்.... அதே பாத்ரூமில் என் பெயரையும் கிருஷ்ண ப்ரியா பெயரையும் இணைத்து கிசுகிசு மாதிரி என்னவோ எழுதியிருந்தார்கள். உங்க டாய்லெட்ல இதுமாதிரி ஒரு சமாச்சாரம் பாத்தேன்னு சொல்லி எப்படி அவளிடம் கேட்பது, இறுதிவரை கேட்கவே இல்லை. (ஆரம்பிச்சுட்டான்டா... )

ஒரு சிலர், காலை எழும்போது உள்ளங்கைகளை பரபரவென தேய்த்து அதில்தான் விழி பதிப்பார்கள். கண்ணாடி பார்த்து எழும் பழக்கத்தை கடைபிடிப்பவர்களும் உண்டு. எழுந்தவுடன் செய்தித்தாள் தேடி, பாத்ரூம் ஓடி, சமையலறை நோக்கி, சாமி படத்தை தலை மாட்டிலிருந்து உருவி... இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி எப்படியோ விடிந்து விடுகிறது. எனக்கெல்லாம் கையினில் சூடாக டீ கோப்பையை வைத்துக்கொண்டு யார் எழுப்பினாலும் எழுந்துகொள்வேன். கோயம்பத்தூரில் டெக்ஸ்மோவில் வேலை செய்துகொண்டே பார்ட் டைம்மாக நாங்கள் குடியிருக்கும் வீட்டு ஓனர் லேத்தில் பணியாற்றினேன். ஒரு ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு எழுந்து கீழே சென்று அங்கே 'நல்ல தண்ணீர்' பிடித்துக் கொண்டிருந்த ஓனர் அக்காவிடம், 'கீ கொடுங்க' என்று தெளிவாகத்தான் சொன்னேன். ஐயர் ஒருவர் ஆட்டுக்கறியை பார்ப்பதுபோல் அருவருப்பாய் பார்த்துவிட்டு, 'ஒரு நிமிஷம் தம்பி' எனக் கூறி உள்ளே சென்றார். திரும்பி வரும்போது கிட்டத்தட்ட 110 டிகிரி செல்ஸியஸ் கொதிநிலையில் இருந்த செம்மண் நிற பானம் ஒன்றை தந்தார். என்னங்க இது?, நீங்கதான தம்பி டீ கேட்டீங்க ... என்றார் எரிச்சலோடு. நான் கேட்டது 'க்கீ'ங்க என்றேன் அப்பாவியாய். இருவர் முகத்திலும் அசடு வழிய, வேறு வழியே இல்லாமல் அந்த டீயை நானே குடித்துவிட்டேன். அதன்பிறகு அவர்கள் வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிக்க கூடாதென முடிவு செய்துவிட்டேன்.


மார்கழி மாத அதிகாலையில் பெருமாள் கோவிலில் கிடைக்கும் பொங்கலுக்கு நிகர் போதையான திடப்பொருளை ரஷ்யாவாலும் கண்டுபிடிக்க முடியாது. காலை நேர பஜனை கோஷ்டி நெற்றி, நெஞ்சு, கைகளை கூட விடாமல் நாமம் போட்டுக்கொண்டு அந்தக் குளிரிலும் சட்டை போடாமல், பாடும் பாடல் ராகத்திற்கு சற்றும் பொருந்தாத பின்னணி இசையை ஆர்மோனியம், மிருந்தங்கம், கஞ்சிரா முதலான கருவிகளிலிருந்து இசைத்துக் கொண்டு போவார்கள். அப்பாவின் நிர்பந்தம் பொருட்டு ஒரு மார்கழி மாதத்தில் பாதிக்கும் மேல் அவர்களுடன் நானும் அந்த அதிகாலையில் யாத்திரை கொண்டேன். வேற்று உடம்பில் அந்தக் குளிரில் எப்படி முயன்றும் கஞ்சிராவைக் கூட தாளத்தோடு இசைக்க முடியவில்லை. இருந்தும் அவர்கள் தாளம் தப்பி கன்னாபின்னாவென்று கருவிகளை இசைப்பதற்கு குளிருக்கு அப்பாற்பட்ட காரணமும் ஒன்று இருந்தது. தெருவினில் சுற்றித் திரியும் நாய்களிடமிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளவே இம்மாதிரியான வினோத சத்தங்களை எழுப்புகிறார்களாம். அதிகாலையில் கண்ட கனவு நிச்சயம் பலிக்கும் என்பார்கள். நான் ஐந்தாவது படிக்கும்போது, என் மாமா அதிகாலையில் கண்ட கனவொன்று பலிக்கும் என இன்றும் திடமாய் நம்புகிறேன். ஏதோ பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக் கூண்டில் என் மாமா நிற்க, நான் நீதிபதியாக வந்தமர்ந்து, ஆர்டர், ஆர்டர், ஆர்டர் என மூன்று முறை வாயால் சொல்லியதோடல்லாமல் சுத்தியலால் மேசையை வேறு மூன்றுமுறை தட்டி, இது ஒரு வழக்கில் எடுத்துக்கொள்ள முடியாத விசித்திர வழக்கு, ஆகவே என் மாமா நிரபராதி... அவரை நான் விடுதலை செய்கிறேன், என்பேனாம். ஒரு நாள் பலித்து நானும் நீதிபதி ஆகிவிட மாட்டேனா என்ன???


கணம் கோர்ட்டார் அவர்களே.....



டிஸ்கி : இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் அனைத்துமே அதிகாலை நிகழ்வாகவே இருப்பதனால்,  'அதி காலை' என்ற வார்த்தை அதிகளவில் இடம்பிடித்திருக்கும். எவ்வளவோ முயன்றும் தவிர்க்க இயலவில்லை. படிக்கையில் எரிச்சலாய் இருப்பின் மன்னிக்கவும்



Thursday, July 4, 2013

அவன் பெயர் பொறுக்கி !

வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு பொதுவான ஒரு பிரச்சனை உண்டு. அவர்களால் எளிதாக சமைத்திட முடியும் ஆனால் என்ன சமைப்பது என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. பதிவெழுதலாம் என நினைக்கும் போதெல்லாம் என் பிரச்சனையும் அதுதான், என்ன எழுதுவது?? சரி இருக்கவே இருக்கிறது 'காதல்', காதல் சலித்துப்போகும் அளவிற்கு நாம் இன்னும் தரம் இழக்கவில்லை என்பதால், மீண்டும் ஒரு காதல் கதை.... 

நான் கல்லூரி படிக்கும்போது, என் சீனியரி.......

ஹே நிறுத்து... நிறுத்து..... இப்ப எதப்பத்தி எழுத போற??

நீ யாரு??

ஹே எரும நான்தாண்டா......

வாடி நல்லாருக்கியா??

நான் நல்லாருக்குறது கெடக்குது... இப்ப நீ எந்தக் கதைய எழுதப்போற??

ஏன் நம்ம கதையத்தான்.....

இல்ல கூடாது நம்ம கதைய நீ எழுதக் கூடாது....

ஏன்??

நீ எழுதினா உண்மைய அப்புடியே எழுதுறேன்னு..... என்னைய சந்தி சிரிக்க வச்சுபோடுவ... 

ச்சீ ச்சீ நான் அப்டி செய்வேனா???

கண்டிப்பா செய்வ.. உன்ற நகக்கண் அசைவு கூட எனக்கு தெரியும். 

சரி சரி இப்போ கை பரபரங்குது நான் எதையாவது எழுதியே ஆகணுமே... 

அதெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்ல.... நம்ம கதைய எழுதுறதுக்கு நீ எதுக்குடா?? கோயம்புத்தூர்ல சுத்திட்டிருக்குற நாய், எரும, காக்கா, குருவிக்கு கூட நம்ம கத தெரியுமே அதுங்களே எழுதும் அதுவும் உன்ன விட சூப்பரா ..

அப்போ ஒன்னு பண்ணலாம்.. எப்போ காக்கா குருவி கூட நம்ம கத எழுதும்னு சொன்னியோ, நம்ம கதய நீ எழுதலாம் எழுதுறியா??

நானா.. ஒதச்சே போடுவேன் ஓடிப்போய்டு. நானும் ஒன்னயாட்டம் வெட்டினு நெனச்சியாக்கும்?? 

அட டையலாக் எழுதும்போது பழகுதமிழ், பத்தி எழுதும்போது உரைநடைத் தமிழ் அவ்ளோதான் அனுபத்தத்தான எழுதப்போற.. கற்பனை செஞ்சு எழுதுறதுதான் கொஞ்சம் கஷ்டம்.

சரி, நானே எழுதுறேன் ஆனா இனி இந்தப்பக்கம் நீ எட்டியே பாக்கக்கூடாது சொல்லிப்போட்டேன் ஆமா, இப்டியே ஓடிப்போய்டு எழுதி முடிச்சுப்போட்டு கூப்புடுறேன்.

இனி இந்திரனுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை, உங்களுக்கு கதை சொல்லவிருப்பது நான், நான் யாரென்று சொல்லி விடுறேன். என் உண்மையான பெயரைச் சொல்வதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. அவனிடம் கேட்டால், அபர்ணா என்று வைத்துக்கொள்ள சொல்வான். அந்த பெயரை சூட்டிக்கொண்டால் கண்களில் புகுந்து தூசியாய் உறுத்துகிறது. எனக்கு இந்தக் கதையில் பெயர் இல்லை. அவனுக்கு பெயர் இருக்கிறது அதை கடைசியில் சொல்கிறேன். நான் அப்படியொன்றும் பேரழகி கிடையாது, உங்கள் பக்கத்து வீட்டில், அடுத்த வீட்டில் இருக்கும் 12வது படிக்கும் பெண் யாரையேனும் நானாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே இருக்கும் பெண்ணை கற்பனை செய்து கொள்ளச் சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் நான் காதலிக்கிறேன், காதலிக்கும் பெண்கள் அடுத்த வீட்டில் இருப்பதே நம் ரசனைக்கு உகந்தது. நான் சொல்லப்போவது, உலகில் இதுவரை சொல்லப்படாத கதையொன்றும் இல்லை. நீங்கள் படித்து ரசித்த கதையாகவோ, பார்த்து சலித்த சினிமாவாகவோதான் இருக்கும் எங்கள் கதையும். இது மற்றுமோர் காதல் கதையே.. இதை நான் உங்களுக்கு சொல்வதுதான் இதில் இருக்கும் சிறப்பும், குறையும்.

அவன் யாரென்றே எனக்கு தெரியாது, பெயர் என்ன? ஊர் என்ன? ஒன்றுமே தெரியாது. அன்று அந்த தொலைபேசியை அவன் தொட்டிருக்கவே கூடாது. அண்ணா, ஊட்டியில் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தான். அந்த கல்லூரியில் பெண்களுக்கு மட்டுமே விடுதி இருந்தது. அண்ணா தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தான். மொத்த விடுதிக்கும் ஒரே ஒரு தொலைபேசிதான். நான் வீட்டிலிருந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், பேசியது அண்ணா இல்லை அந்த ராட்சஷன்.

ஹலோ ****** மேன்சன் ...

கருணா இருக்கானா???

இல்லீங்க இன்னும் கால்ஜ்லேர்ந்து வரல இன்னும் பத்து நிமிசத்துல கூப்டுங்க.. நீங்க??

நான் அவனோட சிஸ்டர்.

ஓ சரிங்க்கா வந்த உடனே சொல்றேன்....

டொக் 

அக்காவாம். எப்படியும் எனக்கு மூத்தவனாகத்தான் இருக்க வேண்டும். பின் எப்படி என்னை அக்கா எனலாம்?? கருணா வரட்டும் அவன்கிட்ட சொல்லி அவனை உண்டு இல்லைன்னு செஞ்சிடலாம். எனதான் மனதில் நினைத்துக்கொண்டேன். ஏனோ அவனுடன் பேசத் தோன்றியது. ஐந்து நிமிடங்களில் மீண்டும் டயல் செய்தேன். விதி இப்படித்தான் விளையாடும் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. இன்னும் வரவில்லை என்றான். இப்போதும் அக்கா என்றுதான் சொன்னான். பெயர் கேட்டேன் சொன்னான். என் பெயரை கேட்பான் என நினைத்தேன். இறுதிவரை கேட்கவே இல்லை, 'ஏதாது பேசுங்க அண்ணா வர்ற வரைக்கும்' என நான்தான் ஆரம்பித்தேன். பிற்பாடு அவன் நிறுத்தவே இல்லை. அவனை நிறுத்தச் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருந்திருக்கவில்லை. இடையிலேயே அண்ணா வந்துவிட்டான். முதல் புகாராக அந்த பொடியன் என்னை அக்கா என விளித்ததை கூறி கண்டிக்கச் சொன்னேன்.

அண்ணா கண்டித்திருப்பான் போல, இம்முறை பேசும்போது அக்காவென சொல்லவில்லை. ஆம் அடுத்தநாளும் டயல் செய்து பேசினேன். தினமுமான உரையாடலில் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறைய ஆரம்பித்தது. அம்மாவின் பார்வையில் வித்தியாசமும் தெரிய ஆரம்பித்தது. நல்ல வேலையாக செமஸ்டரும் முடிந்து விட்டிருந்தது. பைனல் இயர்  முடித்து அச்சடிக்கப்பட்ட ஆட்டோகிராப் நோட்டோடு வந்த இறங்கினான் அண்ணா. ஒரு குறுகுறுப்பான ஆர்வத்தோடு அந்த நோட்டை புரட்டியதில், அவனும் எழுதியிருந்தான். டிஸ்லைக்ஸ் என்ற காளத்தில் ஸ்மோக்கிங் என எழுதி இருந்தான் ஆஹா. அண்ணாவுடனான க்ரூப் போட்டோவில் சிரித்தவாரு ஒரு பக்கமாக சாய்ந்து நின்றிருந்தான். அழகாக இருக்கிறான் போல்தான் இருந்தது. அண்ணாவிடம் கேட்காமலே அவன்தான் அந்த ராஸ்கல் என்பதை அறிந்துகொண்ட என் மூளையை நானே வியந்து கொண்டேன். ஆட்டோகிராப் நோட்டில் இருந்த அவன் வீட்டு தொலைபேசி என்னை யாருமறியாமல் குறித்து வைத்துக் கொண்டேன். 

தாய்மாமாவின் கல்யாணம் வந்தது, அவனையும் அழைக்கச் சொல்லி கர்ணாவிடம் சொன்னேன். நானே அழைக்கத்தான் போகிறேன் என்றான். பத்திரிகையில் அவன் முகவரியை நான்தான் எழுதினேன். கால் செய்து, தான் வரமுடியாது எனச் சொன்னதாக கர்ணா சொன்னான். அன்று இரவே அவனுக்கு போன் செய்தேன். கிரிக்கெட் விளையாட போயிருப்பதாய் சொன்னார்கள். என்ன இது இந்த இரவு நேரத்தில், யாராவது கிரிக்கட் விளையாடச் செல்வார்களா.. அவன் செல்வான். எப்போது பார்த்தாலும் கிரிக்கெட்தான் அவனுக்கு மதியம் 3 மணி, காலை 6 மணி இப்படி எத்தனை மணிக்கு டயல் செய்தாலும், சார் கிரிக்கெட் விளையாடத்தான் சென்றிருப்பார். (அப்போதெல்லாம் செல் போன்கள் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை). அடுத்தடுத்த முயற்சிகளில் எப்படியோ பிடித்து விட்டேன், என் தாய்மாமா என்னை திருமணம் செய்துகொள்ள நிர்பந்தித்ததையும் அதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், ஒரு வருடம் என் படிப்பு தடை பட்டதையும் அவனிடம் சொன்னேன், ஆமாம் ஏன் சொன்னேன்?? இதையேதான் அவனும் கேட்டான் 

இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்ற???

தெரியல தோனுச்சு சொன்னேன்.... என்னை பாக்கனுன்னு உனக்கு ஆசை இல்லையா??

பாக்கனுந்தான் உங்க அண்ணா கல்யானம், இல்ல உன்னோட கல்யாணம்னா பரவால... உங்க மாமா கல்யாணத்துக்கு எப்டி வர்றது??

ஏன் வந்தா என்னா?? நீ வைக்கிற அம்பத்தோர்ருவா மொய்ய திரும்ப வைக்காம போய்டுவாங்களா??

ஒருவாறு பேசி அவனை கல்யாணத்திற்கு வர சம்மதிக்க வைத்துவிட்டேன். கல்யாணத்தில் நடந்த சம்பவமெல்லாம் இன்னுமொரு அழகான சிறுகதை. மண்டபத்தின் உள்ளே ஒரு குழந்தையை தூக்கி வைந்திருந்தேன். ஏதோ இரு கைகள் அதுவாகவே வந்து குழந்தையை தூக்கிக் கொண்டது திரும்பி பார்த்தால் என்னைக் கவனியாமல் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தான். நானும் அவனும் ஒரே நிறத்தில்தான் உடை அணிந்திருந்தோம். முன் ஒத்திகை எதுவும் இல்லாமல் தற்செயலாக நடந்த சம்பவமிது. இதிலென்ன இருக்கிறது? தினம் நம்மை கடந்து செல்லும் எத்தனயோ பேர் நம்மை போன்றே உடை அணிந்து செல்கிறார்கள். அவன் என்னை கடந்து செல்லும் ஏதோ ஒருவன் போல் எனக்கு தோன்றவில்லை. யார் கண்டது இன்று ஒரே நிறத்தில் உடை அணிந்திருக்கும் நாங்கள், நாளை ஒரே மேடையில் அமர்ந்து திருமணம் கூட செய்து கொள்ளலாம், அதுவும் இதே மண்டபமெனில் யார் தடுப்பார்கள்!. தானாக முன் சென்று சிரித்தேன் சில நொடிகள் யோசித்து ஹே ****** நல்லா இருக்கியா?? என்றான். அவன் கண்கள் மிகப் பெரியதாக விரிந்தது முட்டைக் கண்ணன்.  ம் என்றேன். அப்புறம் பேச்சு வரவில்லை. அத்துணை பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பந்தியில் என் கண்கள்  அவன் இலையில் மட்டுமே இருந்தது.  நான் சற்று அதிகமாக வைத்த கேசரியோடு என் கண்களையும் சேர்த்துத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு வடை, 4 பணியாரம், ஒரு ஊத்தப்பம் என்ற எண்ணிக்கை கட்டுப்பாட்டையெல்லாம் மீறி அவன் இலையில் சற்று அதிகமாகவே பரப்பினேன். அவனுடன் யாரோ இரண்டு பேர் வந்திருந்தனர் சரியாக கவனிக்கவில்லை. வீட்டிற்கு வரச் சொல்லி கேட்டேன் முடியாதெனக் கூறி அன்றே சென்று விட்டான். என்னையும் அவனுடனே அழைத்துக்கொண்டு சென்றிருக்கலாம்.

செமஸ்டர் ஹாலிடேய்ஸில் அவனுடன் சரியாக பேச முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவதே அரிதாகிப் போயிருந்தது. எப்போடா காலேஜ் திறப்பார்கள் என்றிருந்தது. ஒருமுறை, எப்பப்பாரு கிரிக்கெட் விளையாட போறியே?? இன்னிக்கு எத்தன ரன் அடிச்ச?? என்ற என் கேள்விக்கு, டக்கவுட் என்றான். 50, 60 ரன் அடிச்சேன்னு சொல்ல வேண்டியதுதான... எனக்கு தெரியவா போகுது? என்றேன். சின்ன விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்லக் கூடாது என்றான். கல்லூரி தொடங்கியது, அவன் தனது இரண்டாமாண்டு படிப்பை தொடர்ந்தான். நானும் கோயம்பத்தூர் காலேஜ் ஒன்றில் சேர்ந்தேன். வீட்டில் அம்மாவின் சந்தேகப் பார்வையில் தொடங்கி பின் அவளின் அனுமதியோடவே அவனுடனான தொலைபேசி உரையாடல் நீண்டது. அவனொருமுறை வீட்டிற்கு வந்திருந்தான். மிகுந்த சங்கடத்துடனையேதான் வந்தான். வற்புறுத்தி அழைத்தது நான்தான். நான்தான் சமைப்பேன் என்று அடம்பிடித்து சமையலறை நுழைந்தேன். அதிக அனுபவம் இல்லையெனினும் உப்பு முதல் உள்ளது வரை அளந்தே செய்தேன். எனக்கே தெரியாத என்னிடம் இருந்த சிரத்தை சிறப்புற வெளிவந்தது. மனது முழுதும் சிரித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா, அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறும்போது அவளிடம் இருக்கும் ஆத்மதிருப்தியோ, ஆயுட்கால பலனோ ஏதோ ஒன்றை பார்த்திருக்கிறேன். இவனுக்கு பரிமாறும்போது நானதை உணர்ந்தேன். அண்ணாவின் பார்வையில் நிறையவே சகுனித்தனம் தெரிந்தது, பொருட்படுத்தவில்லை. அவனை ரசிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. எங்கள் வீட்டு மத்தியில் என் அருகில் அமர்ந்திருக்கிறான், நான் பறந்து கொண்டிருக்கிறேன். அடிக்கடி தலை முடியை கோதுகிறான்.... இவனுக்கு அறிவே கிடையாது அருகில்தான் நானிருக்கிறேனே... என்னிடம் சொன்னால் என்ன.... என் விரல்களே அவன் தலை முடியை கோதுவதற்க்குத்தான் படைக்கப்பட்டது என திடமாக நம்பினேன்.   பெரிய இளையராஜா ரசிகன், ராஜா பாடல்கள் பற்றி நிறையச் சொல்லுவான். எனக்கும் ஏ ஆர் ரஹ்மான்தான் பிடிக்கும். இதை முன்னிட்டு பல சண்டைகள் நிகழ்ந்திருக்கிறது எங்களுக்குள். ரஹ்மான், ராஜா இருவருமல்லாதவர்கள் இசையமைத்த பாடல்கள் நிறைந்த கேசட் ஒன்றை பரிசளித்தான். பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்துக்கொடுக்கும் ஒருவன். உள்ளுக்குள் காதலோ என்னவோ ஒன்று அலாரம் அடித்தவாறே இருந்தது. யார் முந்தி சொல்வது என்பதில் இருவருக்குமான பொதுவான தயக்கத்தில் இருவருமே சொல்லவே இல்லை. இடையில் இன்னுமொரு செமஸ்டர், நான்கு முறை கோயம்பத்தூரில் திருட்டுச் சந்திப்பு, சினிமா என என்னென்னவோ கடந்திருந்தது. இதோ வந்தே விட்டது பிப்ரவரி 14. உள்ளுணர்வு எப்படியும் அவன் சொல்லிவிடுவான் என்றே சொல்லியது. சில ரிங்குகளை கடந்து அவன் குரல், பின்னணியில் 'எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது'  பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பேச்சுவாக்கில்தான் சொன்னான், 

நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, பொறக்குற கொழந்த ரொம்ப அழகா இருக்கும்ல....

இருக்குந்தான்... உன்ன யார்ரா கட்டிக்குவா???

எரும.. நான் ஐ லவ் யூனு நேரா சொல்லாமா அப்டி சுத்தியடிச்சு சொன்னேன். 

திடீர்னு கேட்டா எப்டி?? நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.

எத்தன நிமிஷம்??

பன்னி.... ஒரு டூ டேய்ஸ்??

ம் 

ரீசீவரை வைக்கும்போது பின்னணியில் 'லவ் பண்ணு ஹைய்யோ பண்ணு' என்று ஒலித்தது,  பண்ணிட்டேன். 

வாரம் தவறாமல் அவன் கோயம்பத்தூர் வந்தான். நான் ஸ்பெசல் கிளாஸ் எனச் சொல்லி வந்துவிடுவேன். என்ன மாயம் செய்தானோ என் அம்மாவிற்கு அவனை ரொம்பவே பிடித்திருந்தது, அந்த தம்பி இருக்கே... என ஆரம்பித்தால் ஒரே தம்பி புராணம்தான். நான் சொல்லவேண்டியது அனைத்தையும் அவளே சொல்வாள். பேசாம அவன நீயே கட்டிக்கலாம் என்பேன் அடிமனத்தின் வெளிப்படுத்த இயலா பொறாமை காரணமாய். அடி செருப்பால.. என்பாள் நிஜமான கோபத்துடன். நான் இரண்டாமாண்டு முடிக்க போகிறேன் அவனும் மூன்றாமாண்டு முடிக்க போகிறான் இடையில் மூன்று முறை எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்திருந்தான். அதையெல்லாம் முழுமையாக எழுத வேண்டுமெனில் இச்சிறுகதையை குறு நாவலாகத்தான் மாற்ற வேண்டும். அவன் இல்லாத அடுத்த நொடி தீக்கங்குகளை மென்று தின்னுவது போல் இருந்தது. அப்பாவின் சந்தேக பார்வை, சங்கேத மொழி அனைத்தையும் தாண்டி அவ்வப்போது அவன் நினைவு என் உதடுகளை புன்னகையில் நனைக்கத்தான் செய்தது. பெண்ணாய் இருப்பதன் மொத்த சந்தோசங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன். யோசித்துப் பார்த்ததில் இவன் மேல காதல் வந்த காரணம் இதுவரை புரியவில்லை.  இவனை காதலித்தது சரியென்று மட்டும் பட்டது. (இடையில் அவன் வீட்டிற்கு போன் செய்து அவனில்லாமல், என் மாமனார் ஹலோ சொல்லி, நான் யாரென்பதை உளறி அல்லது சொல்லியே தீருவேன் என்ற ஆர்வத்தில் கொட்டித் தீர்த்து, அதனால் அவன் சந்தித்த இன்னல்களை சொல்லச் சொன்னால் இன்னும் 7 அத்தியாயம் எழுதலாம். ) கர்ணா எங்களை முன்னமே மோப்பம் பிடித்திருந்தான். இப்போது கையும் காதலுமாக பிடித்துவிட்டான்.

அண்ணா என்னை தனியாக அழைத்து, தீராத வார்த்தைகளில் திட்டி தீர்த்தான். அம்மாதான் ஆறுதல் கூறினாள், பிற்பாடு அவளையும் வந்து திட்டினான். இவனுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். அம்மாவும் அப்படித்தான் சொன்னாள், எல்லாவற்றையும் அவனிடம் சொன்னேன். வழக்கத்திற்கு மாறாக அவன் அமைதி காத்தது விசித்திரமாய் இருந்தது. என்னைச் சுற்றி ஏதோ ஒரு வலை பின்னப்படுவதை மனம் உணரத் தொடங்கியது. இந்த வாரம் வர முடியாது எனச் சொல்லிவிட்டான். ப்ராஜக்ட் வொர்க் இருக்கிறது என்றான். பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டான். என் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து நழுவிக் கொண்டிருந்தது தெரிந்தது காரணம்தான் விளங்கவே இல்லை. அண்ணாவின் அலட்சிய புன்னகையும், எதையோ சாதித்த திமிர் கொண்ட அவன் பார்வையும் என் தலை மயிரை கத்தையாக பிடித்து சுவற்றில் முட்டும் வலியை தந்தது. போர்வைக்குள் புகுந்துகொண்டு பேசியதையும், ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சியதையும் நினைத்துக் கொண்டேன். சேமிப்பு கிடங்கில் ஆனந்தக் கூத்தாடும் அவன் முத்தங்களில் கொஞ்சத்தை அள்ளிப் பருகிக்கொண்டேன், கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. இவையனைத்திற்கும் மௌன சாட்சியாய் எங்கள் வீட்டு கருநீல நிற தொலைபேசி என்னைப் பார்த்து சிரித்தது. என்னைப் பாருங்கள், நான் நிறையவே அழுதிருக்கிறேன் கண்கள் வீங்கி, தலை சீவுவதில் கூட அக்கறையில்லாமல் கலைந்த கேசத்தோடு, குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது  பற்றிய எந்த பிரஞ்ஞையுமின்றி அமர்ந்திருக்கிறேன். 

இந்த வாரம் வருகிறேன் என்றான். என்னையுமறியாமல் என் சிறகுகள் என் மேலாடை தாண்டி விரிந்து விட்டிருந்தது. போனேன், பார்த்தோம் நான் அவனை கட்டிக்கொண்டு கதறியழுதபடியே நடந்த அனைத்தையும் சொன்னேன். சலனமற்ற கண்களினால் அனைத்தையும் உள் வாங்கிக்கொண்டான். அவன் உடலில் சிகரட் வாடை அடித்தது, புது பழக்கம்.  பின்பு, ஏதேதோ சொன்னான் பை நிறைய அவன் கொண்டு வந்ததை என்னிடம் தந்தான்... பிரித்துப் பார்த்...
..............
....
......

ஹே அடுத்து சொல்லுடி இப்டி பாதில விட்டுட்டா எப்டி??

அன்னைக்கு நான் என்னடா பேசினேன்?? நீதாண்டா பேசுன.... நான் அழுதுகிட்டேதான இருந்தேன்... இப்போ மாதிரியே.. போடா இங்கயும் என்ன அழ வச்சுட்டேள.. பொறுக்கி 

உங்ககிட்ட அவன் பேர கடைசியா சொல்றேன்னு சொன்னேன் இல்லையா?? "அவம்பேரு பொறுக்கி"








Monday, May 27, 2013

காந்தியை சுட்டவன் கோட்சே அல்ல !

ரஜினி படங்களில் ஏதோ காட்சியில் எப்படியாவது இடம் பெற்றுவிடும் பாம்புகள், என் கனவுகளையும் விட்டு வைத்ததில்லை. உறக்கத்தில் நான் கண்ட கனவுகளில் அதிகமாய் இடம்பெற்றது பாம்புகளே. ஆண்களின் அதுவும் வயதிற்கு வந்த ஆண்களின் கனவுகளில் பாம்புகள் வருவதற்கான உளவியல் காரணங்கள் சுவாரஸ்யமானவை. என் கனவுகளில் வரும் வித விதமான பாம்புகளை உங்களால் ஜூவிலோ, காட்டிலோ, டிஸ்கவரி சேனலிலோ கூட பார்த்திருக்க முடியாது. பெரும்பாலும் ஐந்தடிக்கும் குறைந்த உயரமுள்ள பாம்புகளே வரும், மஞ்சள் நிறத்தில் சிகப்பு புள்ளி வைத்திருக்கும் ராமராஜன் சட்டை கலர் பாம்புகளை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாள் என் கனவிற்குள் எட்டிப் பாருங்கள் பார்க்கலாம். வரும் பாம்புகள் சும்மாவா இருக்குமென்கிறீர்கள்? என் முழங்காலுக்கு கீழான சதை பகுதியை பாம்பொன்று தன் கூறிய பற்களால் ஆம் பற்களால்தான், கவ்விப் பிடித்துக் கொண்டது நான் அதன் வாலை பிடித்து இழுத்ததில், நேர்கோடு போலான சர்ப்பம் இன்னும் இறுக்கமாக கவ்விப்பிடிக்க, பதறி எழுந்தேன். போர்வைக்குள்ளே, கட்டிலின் அடியே எங்கோ பாம்பொன்று ஊர்ந்து கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை. ஒவ்வொரு இரவிலும் பாம்புகளின்  ராஜ்ஜியம்தான். திருமணத்திற்கு பிறகு பாம்புகள் கனவுகளில் வருவதை தவிர்த்துவிட்டன ஏனென தெரியவில்லை.

பொதுவாக கனவுகள் ஏன் வருகின்றன என்கிற அறிவியல் உண்மையை எல்லாம் அறிய எனக்கு ஆர்வமில்லை. வரும் கனவுகளை ரசிக்கவே எனக்கு நேரம் போதுமானதாய் இல்லை. ஒரு நடிகை கூட என் கனவுகளில் வந்ததே இல்லை. ராதா மட்டும் கேட்டிருந்தால், என் கற்பைக் கூட அர்பணிக்க தயாராயிருந்தேன் அப்பேற்பட்ட ராதா கூட வந்ததில்லை, ஆனால் நிறைய பெண்கள் வந்ததுண்டு. கனவில் வந்த எல்லா பெண்களுமே ஒரு தேவதைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்றவர்களாய் இருந்தார்கள் என்பது கூடுதல் தகவல்.  ஒருமுறை என் மனைவியும் முன்னாள் காதலியும் ஒருசேர வந்தார்கள், காதலி கனிவான கண்களை அப்போதும் வைத்திருந்தாள், மனைவிக்கும் அழகான கருணை மிகு கண்கள்தான் ஏனோ அவ்விடத்தில் அவ்வளவு சாந்தமாக இருந்திருக்கவில்லை. எட்டாவது படிக்கும்போது கேராளாவில் பார்த்த இடது நெற்றியோரத்தில் தழும்பும், ஆண்பிள்ளை போன்ற நெற்றியில் பட்டுத் தெறிக்கும் கூந்தலும் பெற்றிருந்த அந்த பெண் அடிக்கடி கனவில் வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள், தற்போது யார் அவளிடம் துன்புறுகிறார்களோ..... அந்த ஊரின் பெயர், தாடிக்கொம்பு என நினைக்கிறேன் அவ்வூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும்போது பார்த்த அந்த பச்சை நிற சுடிதார் அணிந்திருந்த, நீள மூக்கும் அமுங்கிய நெற்றியும், குவிந்த உதடுகளும் பெற்றிருந்த பெண்ணொருத்தி, என் மனைவிக்கு தெரியாமல் இன்றும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. பெண்களால் நிறைந்த கனவுகளை, கலைக்கும் துஷ்ட செயல் புரியும் யாராயிருப்பினும் அவர்களுக்கு இந்த மண்ணில் கருணையே வழங்கக் கூடாது.

நாய் ஒன்று குரைத்ததோடில்லாமல், பாய்ந்தோடி வந்து என்னைக் கடித்தும் வைத்துவிட்டது கனவில்தான். என் போல நாய்களுக்கு பயந்தவனை உங்களால் எங்குமே பார்க்க முடியாது. நான் நாய்களுக்கு பயப்படுவேன் என்பது என்னை விட நாய்களுக்கு நன்றாக தெரிந்திருப்பதுதான் என் ஆச்சர்யம், கோவையில் வசித்தபோது, உருவத்தில் வீட்டில் வளர்க்கும் முயல் அளவே இருக்கும் நாயொன்று துரத்தி வந்ததில் கேட்டில் லுங்கி மாட்டி சர்ரென கிழிந்து தொடை வரை வெளியில் தெரிந்துவிட்டது. அந்த என் கவர்ச்சி காட்சியை யாருமே பார்க்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல். கனவில் கடித்த நாயினை பற்றி பாட்டியிடம் கூறி, பலன் என்னவென்று வினவியதில் யாரிடமும் அதிகம் பேசாதே என்றார். அன்றிலிருந்து எந்த நாயும் கனவில் வந்து என்னை கடிக்கவில்லை. ஆனால் நிஜத்தில் நான் நிறையவே பேசுவதால், மனிதர்கள்தான் நாய் போல் கடிக்கிறார்கள். இறக்கை இல்லாத எருமையொன்று என்னை தூக்கிச் சென்று, நடு வானில் கீழே வீசியே கனவுக்கும் அடுத்த நாளே எனக்கு நேர்ந்த ஆக்சிடெண்டுக்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.

பாலைவனத்தில் பூக்கள் பூப்பது, சுதா ரகுநாதன் நம் வீட்டு ஹாலில் கண்ணன் பாட்டு பாடுவது, இந்திய கிரிக்கட் அணியில் ஒன் டவுன் இறங்கி பிரட் லீ பந்தை சிக்ஸருக்கு பறக்க விடுவது, அன்னா கோர்னிகோவா என் லட்சிய புருஷன் இவன்தான் என நம்மை கை காட்டுவது, ரஜினியை தற்செயலாய் ஏர்போர்ட்டில் சந்தித்து, அவரிடம் ஒரு மால்ப்ரோ சிகரட் கடன் கேட்பது, யாருமில்லாத் தீவில் நிர்வாணமாய் திரிவது, நிலவில் முதன்முதலில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் நிலவில் நம்மை பார்த்து அதிசியப்பது, அம்பானி நம் வீட்டு வாட்ச்மேன் வேலைக்கு அப்ளிகேசன் போடுவது, கேட்டதனைத்தும் கொடுக்கும் அலாவுதீன் பூதமொன்றை உடன் வைத்திருப்பது, தேநீர் பருகியபடியே நீரில் மிதப்பது. யாராலோ சாத்தியப்படும் அல்லது சாத்தியப்படவே படாத இம்மாதிரியான நிகழ்வுகளை நமக்கு நிகழ்த்திக் காட்டும் கனவுகளை பிடிக்காதவர்களும் இருப்பார்களா?? இந்த ஒரு கனவை என்னால் மறக்கவே முடியாது. பிரார்த்தனைக்கு இரு இளம்பெண்கள் தோள்களில் கை போட்டபடி வேக வேகமாக நடந்து வருகிறார் காந்தி, நான் ஓரமாக  அதனை படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். காந்தியை மறைத்த கோட்சே அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார், கூட்டம் சிதறியோட காந்தி சிரித்தபடி நிற்கிறார். அப்போது எங்கிருந்தோ வந்த உருவமொன்று கோட்சேவை தள்ளிவிட்டு, காந்தியை சுடுகிறது. நான் பதறிப்போய், காந்தியை கோட்ஸே அல்லவா சுட்டிருக்க வேண்டும் நீ யார்? என அவன் சட்டையை பிடித்துக் கேட்க, என்னை நெட்டித் தள்ளிவிட்டு, என் நெற்றிபோட்டில் துப்பாக்கியை வைக்கிறார்  உருவநாயகன் கமல். !

ஹே ராம்...

    

Monday, March 4, 2013

இரண்டு நிமிடங்கள்...


நான்காவது படிக்கும்போது ஒரு வெள்ளிக்கிழமை மைதானத்திற்குள் பாம்பு நுழைந்து விட, யார் சொல்லியும் கேளாமல் வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் சவுரியார் அந்த பாம்பினை பெரிய குச்சியினால் அடித்தான். சற்று துடித்த பாம்பு தன் வாயினைஅகல விரித்து சவுரியாரை நோக்கி சீறியது அதே குச்சியைக் கொண்டு அந்த பாம்பை தரையோடு சேர்த்து குத்தி கொன்றே விட்டான். வால் மட்டும் ஆடியபடி இருந்த பாம்பை தூக்கி மைதானத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான். தனலக்ஷ்மியின் கையை நானும், என் கையை தன லக்ஷ்மியும் இறுக பற்றியபடி கூட்டத்தின் நடுவே இதனை கவனித்துக் கொண்டிருந்தோம். தன லக்ஷ்மி கவிழ்த்து வைக்கப்பட்ட நாதஸ்வரத்திற்கு சடை பின்னியது போலிருப்பாள். என்னை விடவும் உயரம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் முடித்து விட்டார்கள். ஐந்தாவது படிக்கும்போதே வயதிற்கு வந்து விட்டாள். பின்னாளில் அவளை சந்தித்தபோது மூன்று குழந்தைகள் என்றாள், மூன்றில் ஒன்றுக்கேனும் என் பெயர் சூட்டியிருப்பாளென குழந்தைகளின் பெயர்களை கேட்டேன். மூன்றுமே பெண் பிள்ளைகள். மதியம் சாப்பிட்ட புளிச்சாதத்தின் வாசனை இப்போதைய ஏப்பத்தில் வெளிப்படுகிறது. புளிச்சாதம் சாப்பிட்டால் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டி இருக்கிறது போதாக்குறைக்கு தொட்டுக்கொள்ள நார்த்தாங்காய் ஊறுகாயும் தேங்காய் தொகையலும் கொடுத்து விடுகிறாள். இனிமேல் புளிச்சாதம் செய்யவே கூடாதென கண்டிசனாக சொல்லிவிட வேண்டும். முடியுமா?? சிரிப்பு வருகிறது. இந்த ஊருக்கு வந்து ஏழு வருடம் ஆகிறது. சாலையின் இடைவிடாத இரைச்சல் பழகி போய்விட்டது. லிப்ஸ்டிக் போட்ட உதடுகளின் மத்தியில் சிகரட்டினை பொருத்தி நெயில் பாலிஸ் விரல்களால் லைட்டரை அழுத்தி சிகரட் பற்ற வைக்கும் பெண்கள், இப்போதெல்லாம் என்னை ஆச்சர்யப் படுத்துவதில்லை. பின் நவீனத்துவம் எந்த உலோகத்தால் ஆனது என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்வதாய் பொய் சொல்லி பெண் பார்க்க அழைத்து சென்று விட்டார்கள். இதுவரை நீச்சல் தெரியாமல் இருப்பது ஒருவித கூச்சமாகத்தான் இருக்கிறது. எப்படியும் ஒருநாள் கற்றுக் கொள்ள வேண்டும் கடல் இல்லாத போனாலும் இடுப்பு வரை தண்ணீர் இருக்கும் ஆற்றிலாவது கற்றுக் கொள்ள வேண்டும். இரவில் வரும் கனவுகளை மட்டும் படபிடித்து வைக்க முடிந்தால் நாட்டில் திரைப்படங்கள் உருவாகியிருக்குமா என்பது சந்தேகம்தான். கனவுகளில் கூட நிம்மதியாக தூங்குவது போல் கனவு வருவது இன்னும் விந்தை. அரை தோழனின் குறட்டை சத்தத்தில் தூக்கத்தை தொலைத்த இரவுகள் ஏராளம் நல்லவேளை தற்போது சில வருடங்களாக அந்த பிரச்சனை இல்லை. ஆதி பகவான் ____ பகவான். ச்சை விஸ்வரூபமும் பெரிதாக கவரவில்லை. ராஜேந்திரனும் அதைத்தான் சொன்னான். தாலிபான் பற்றிய காட்சிகளிளெல்லாம் என் அருகில் அமர்ந்திருந்தவர் பதிமூன்று கொட்டாவிகள் விட்டார். அந்த ஊஞ்சல் காட்சியில், ஊஞ்சல் கயிற்றை எங்கே கட்டிருப்பார்கள்??. ஆதிரா இப்போதெல்லாம் அழகாக "அம்மா" என்கிறாள். சத்தமாக, மெதுவாக, அதிகாரமாக, ஆர்வமாக, என பலவித பாவங்களில் அம்மா என்ற வார்த்தையை உச்சரிக்க கற்று இருக்கிறாள். பிடிவாதம் அதிகம்தான் அது சரி பிடிவாதம் இல்லாத குழந்தை எப்படி குழந்தையாகும்?? அம்மாவை அருகில் அழைத்து சிரித்தவாறே கன்னத்தில் அடித்து விட்டாள். சும்மானாச்சுக்கும் அழுது கொண்டிருந்த மனைவியை காட்டி அம்மாவை அடிக்க கூடாதுப்பா அதிலும் அப்பாவை அடிக்கவே கூடாது என்றேன். இப்போதெல்லாம் ஒரு இடத்தில் நிற்பதில்லை எந்த விளையாட்டு பொருளும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவளை கவர்வதில்லை. அன்று அப்படித்தான் ஏதோ ஒரு ஆட்டுக்குட்டியை காட்டி அடம்பிடித்து வீட்டிற்கே தூக்கி வரச் செய்துவிட்டாள். இரண்டுமே இளங்கன்றுகள் எங்களுத்துதான் பயமாக இருந்தது. அவள் சரியாக முப்பத்தி இரண்டு நிமிடம் அதனுடன் விளையாடி ஆட்டுக்குட்டியை அம்போவென தவிக்க விட்டு அவள் மாமாவுடன் பைக் ஏறி சுற்றக் கிளம்பி விட்டாள். புதிதாக மாட்டியிருக்கும் திரைச்சீலை மெருன் கலரில் இருக்கிறது புதிதாக மாட்டியது என்றால் பழையதை தூர எறிந்துவிட்டு மாட்டியது அல்ல, பதிதாக அதாவது இப்போதான் மாட்டியே இருக்கிறார்கள் முன்னாடி இல்லவே யில்லை. அடிக்கடி வரும் தலைவலிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கோடரி தைலம் அதன் சக்தியை என் தலையில் வீணடிக்கிறது. படுத்துக் கொண்டே எம்ஜியார் ஆட்சியை பிடித்தாராம் வேடிக்கை, என்னால் படுத்துக் கொண்டே பால் டம்ளரைக் கூட பிடிக்க முடியவில்லை. குஷ்பூவிற்கு கோவில் கட்ட நினைத்தவர்களை தேடிக் கண்டறிந்து டைம்பாஸில் இன்டர்வியு செய்திருந்தார்கள் படித்தேன். அதில் ஒருவன் வெளிநாட்டில் இருக்கிறானாம், பெரும்பாலும் அங்கே உருப்படாமல் இருந்தவர்கள்தான் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. அண்ணன் தம்பி ரெண்டு பேருங்கிறீங்க வடையும் பிய்க்க கூடாதுங்கிறீங்க காமடிதான் ஞாபகம் வருகிறது. ஸ்டாலின் அழகிரி பஞ்சாயத்து காணும்போது. என்னை கேட்டால் ஸ்டாலின் அடுத்த திமுகவின் தலைவராக சரியான தேர்வு. நான் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்.... இப்போது பெப்சி உமா என்ன செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. ஒரு காலத்தில் அவருக்கு மிகப்பெரிய க்ரேஸ் இருந்தது குழந்தைத்தனமான முகமும் குழைவில்லாத பேச்சும் இப்போது நினைத்தாலும் அய்யய்யோ ஆனந்தமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே... செம பாட்டு, பாட்டு அளவிற்கு படத்தில் ஒன்றுமே இல்லை. எந்தக் காட்சியுளும் அழுத்தமே இல்லை ஒரு கட்டத்திற்கு மேல் தம்பி ராமையா பொறுமையை சோதித்து விட்டார். ப்ளாக் எழுதி மாமாங்கம் ஆகிறது இன்றாவது எதையாவது கிறுக்கிட வேண்டும்!!!

24 மணி நேரத்தில் தனிமை கிடைக்கும் ஒரு இரண்டு நிமிடத்தில் என் மூளை இவ்வளவு மட்டுமே சிந்திக்க பக்குவப்பட்டுள்ளது. இன்னும் மூளை வளர்ச்சி அடைய வேண்டும் போலும்