Tuesday, October 22, 2013

விஷம் !?

எல்லா நேரங்களிலும் சாலையோரங்கள், அழகானதாகவே அமைந்து விடுவதில்லை. இரு சக்கர வாகனமொன்று நடு சாலையில் கவிழ்ந்து கிடக்கிறது, டயர் தேய்த்த கருப்பான கோடொன்று நீளமாய் தடம் பதித்திருக்கிறது. வேடிக்கை பார்க்க சுற்றிலும் மனிதர்கள் இல்லாத விபத்து நிகழ்வுகள் நம் நாட்டில் சாத்தியமே இல்லை. கூட்டத்தில் புகுந்து முன் வரிசையில் இடம்பிடித்து ஆர்வத்தோடு எட்டிப் பார்த்ததில், சரியாக உச்சந்தலையிலிருந்து ரத்தக் கோடொன்று மூன்றடி நீளத்திற்கு விரிந்து தரையில் உறைந்திருக்கிறது. அது பிணம், அதுவும் மிகச் சமீபத்தில் உருவாகிய சூடான ஃப்ரஷான பிணம். ஈக்களும் மனிதர்களும் அதை சூழ்ந்திருக்கிறோம். பிணத்தின் கண்கள் திறந்தவண்ணமேயுள்ளன. 

இந்தப்பிணம் இனி எழாது ஏதோ ஒரு உயிர் இந்த பிணத்தின் உயிர் வருமென காத்திருக்குமாயின் இது கொடுத்து வைத்த பிணம்தான். இப்போதுவரை நெஞ்சிலடித்து கதற, ஒப்பாரி வைத்து பதற சுற்றிலும் எவரும் இல்லை. கூட்டத்தில் ஆளுக்கொரு கதை சொல்கிறார்கள். உச் கொட்டுகிறார்கள், அருகில் செல்ல தயங்குகிறார்கள், சிறுவர்களை விரட்டி அடிக்கிறார்கள். தூரத்தில் போலிஸ் வாகனம் கண்டு அப்படியே நழுவுகிறார்கள். போலிஸ் வந்து அவர்கள் பங்கிற்கு சில சம்பிரதாய கேள்விகளை கேட்டுவிட்டு இன்றைய தினம் இந்த பிணத்தோடு என்பதன் சலிப்பை முகத்தில் காட்டி கடமையை முடிக்கிறார்கள். 

அறைக்கு திரும்பி சாப்பிட பிடிக்காமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தால்... அரை முழுவதும் ரத்த வாடை. சுவர்களும் மேற்கூரையும் சிகப்பு வண்ணம் பூசிக்கொண்டு ஆங்காங்கே குருதி சொட்டும்படி செய்கின்றன. கட்டிலுக்கு கீழ் சிறியதாய் குருதியால் நிரம்பிய தற்காலிக குட்டை ஒன்று தோன்றுகிறது. அதில் நீந்தும் மீன்களும் சிகப்பு வண்ணத்திலேயே இருக்கின்றன. மீன்களில் ஒன்றுக்கு இறக்கை முளைத்து ரத்தத்திலிருந்து மேலெழும்பி பறந்து சென்று, மேலே சுழலும் மின் விசிறியில் இரண்டாக அறுபட்டு ரத்தம் பீய்ச்சியடிக்க மீண்டும் குட்டையில் விழுந்து நீந்த தொடங்குகிறது. கட்டில் கால்களை சுற்றிக்கொண்டு ரத்தம் மெல்ல மெல்ல மேலே வருகிறது. பெரிய ரத்தப்போர்வையொன்று அப்படியே மேலே விழுந்து போர்த்திக்கொள்கிறது. இனி விடியும்போது ரத்தம் இருக்காது ஆனால் கறை ஒவ்வொரு இரவிலும் தென்படும்.

மற்றொரு சாலையோரம், பாம்பொன்றை கண்ட நான் அமைதியாக கடந்திருக்கலாம் அந்த பாம்பைப் போலவே. அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரை அழைத்து, பாம்பை கட்டினேன், பார்த்தவர் கொஞ்சமும் தயங்காமல் தன் கையிலிருந்த பெரிய தடியால் அந்தப் பாம்பை ஓங்கி அடித்தார். தடி தரையில் இறங்கவும் பாம்பு நகரவும் சரியாக இருந்தது. 

'அண்ணா விடுங்க... ஒன்னும் செய்யாதீங்க அது போகட்டும், விடுங்கண்ணா ' என்ற என் குரலை அவர் கண்டு கொள்ளவே இல்லை அந்த பாம்பும்தான். விரட்டி பிடித்து ஓங்கி ஓங்கி அடித்து அந்த பாம்பை கொன்றே விட்டார். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் வளையம் வளையமாக துடித்து அப்படியே சுருண்டு மடிந்து போனது அந்தப்பாம்பு. இன்னமும் வால் ஆடிக்கொண்டே இருந்தது. 'அத ஏன்னா கொன்னீங்க? அதுபாட்டுக்கு சும்மாதான போயிட்டிருந்துச்சு' என்ற கேள்விக்கு சிரித்தவாறே, 'பாம்ப பாத்தா அடிச்சுக் கொல்லாம வீட்டுக்கு தூக்கிட்டு போயி வளக்கவா சொல்ற, இங்க மனுஷன் செத்தாலே மதிப்பில்ல பாம்பு செத்ததுக்கு துக்கம் விசாரிச்சிட்டிருக்குற' என்றார். கலங்கிய கண்களோடு வீடு சேர்ந்தேன். 

சாப்பிட அமர்ந்தால், சாதத்திற்கு இடையில் ஒரு பாம்பு சடாரென எழுந்து என் கண்களை தீண்ட பார்த்தது. கொழம்பிருந்த பாத்திரத்தில், நான்கைந்து பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. தட்டை உதறிவிட்டு அறைக்கு சென்று தாளிட்டேன். எனக்கு முன்னாலையே என் படுக்கையில் பாம்புகள் புரண்டு கொண்டிருந்தன. எவ்வளவு முயற்சித்தும் அன்றிரவு முழுவதும் அந்த பாம்புகளை துரத்த முடியவில்லை. கழுத்தை இறுக்கியபடி ஒரு பாம்பும், இரு கைகளையும் பிணைத்து சுற்றியபடி ஒரு பாம்பும், கால்களுக்கிடையில் ஊர்ந்தபடியே எத்தனை பாம்புகள் எனத் தெரியாதபடி நிறைந்திருந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை பாம்புகளும் நானும் ஒரே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தோம். பாட்டியிடம் சொன்னதில், நாகம்மா கோவில் புற்றில் பால் ஊற்றி வரச் சொன்னாள். இன்றும் என்னை பாம்புகள் தொடர்கின்றன. நான் ஒருமுறை பாலூற்றியதோடு சரி தொடரவில்லை.

இறந்ததை, பார்த்த எவருக்கும் 'இறந்து' பார்க்க எண்ணம் வராது. இறந்துதான் பார்ப்போமேவென உயிர்கொல்லி விஷதிரவ புட்டியோன்றும், '5000' பீர் புட்டியோன்றும் வாங்கி ஒரு சாலையோரம் அமர்ந்தேன். அத்திரவத்தின் வாடையே மயக்கம் தந்தது. குமட்டி குமட்டி வயிற்றை புரட்டியது. பீர் புட்டியை திறந்து பாதியை கொட்டிவிட்டு, மீதியில் திரவத்தை கலந்தால் இளஞ்செந்நிற திரவம் முழு வெண்மை நிறம் பூசியது. பெட்ரோல் நெடியுடன், கெட்டுப்போன பழைய சோற்றின் வாடை சேர்ந்தாற்போல் இருந்தது அந்த மணம். கண்களை இறுக மூடிக்கொண்டு குமட்டக் குமட்ட பாதியை குடித்து. புட்டியை உடைத்தெறிந்துவிட்டு, எப்போதுமில்லாத அதிக வேகத்தில் நடக்கலானேன். குடலுக்குள் குளிர்ச்சியாய் திரவம் பாய்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல கண்களில் இருள் சூழ்ந்தது. 

காதலிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து சென்று கொண்டிருந்தனர். இப்போது போட்டிருக்கும் இந்த சட்டை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சீனியர் ஒருவர் கேட்டுப்பார்த்தும் தர மறுத்த சட்டை கரும்பச்சை நிறப் பின்னணியில், வெள்ளை, கருப்பு, நீள நிறத்தில் நிறைய கோடுகளும் கட்டங்களும் இடப்பட்டிருக்கும். இந்த சட்டையை அவனுக்கு தந்திருக்கலாம். இறந்தபின் இந்த சட்டையை என்ன செய்வார்கள் என்ற எண்ணம் கூடுதல் துன்பம் தந்தது. இந்த சூழ்நிலைக்கு மழை பெய்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. பாட்டி சமையலில் மட்டன் வறுவல் தேடி நாக்கு பயணித்துக் கொண்டிருக்கிறது. இறந்து போக இருக்கும் சொற்ப நேரங்களில் எதை எதையெல்லாம் நினைவிற்கு கொண்டு வருவது என்பதில் மூளை மிகவும் குழம்பியிருந்தது. நிறைய பெண்களையே அது முன்னிறுத்தியது. முத்தமிட்ட முதல் தோழி முதல் முந்தாநாள் குடிவந்த பார்வதி வரை நொடிக்கொருமுறை கண்ணில் வந்து மறைந்தனர். 

கால்கள் வீட்டுக்கு வந்து சேர்த்து விட்டிருந்தன. படுக்கை தயாராய் இருக்கிறது படுக்க வேண்டியதுதான். சுற்றிலும் ஒரே இரைச்சல் யாராரோ எட்டி பார்த்தார்கள். நிறைய கேள்விகள் கேட்டார்கள் யாரை கேட்கிறார்கள் என்பது விளங்கவில்லை. வயிற்றுக்குள் ஏதோ இருப்பெரும் அணிகள் ஒவ்வொரு பக்கமும் 1000 பேருக்கு குறையாத காலாட்படையும், குதிரை, யானைப் படைகளையும் பெற்ற இரு அணிகள் ஒன்றையொன்று தாக்கி பெரிய யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. சூடாக தேநீர் பருக வேண்டும்போல் இருந்தது. எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் செத்து விடலாம், பாடை கட்டுவார்கள், சங்கூதுவார்கள், பால் ஊற்றுவார்கள். யாரெல்லாம் என் சாவிற்கு அழுவார்கள் என தெரிந்துகொள்வதில் ஒரு சின்ன ஆர்வம் மேலிட்டது. முதலில் அழுவார்களா என்ற சந்தேகத்தில் நிறைவுற்றது அச்சிந்தனை. 

ஏன் சாகிறோம் என யாராவது கேட்டால் என்ன சொல்வது? செத்தபின் நம்மையார் கேட்க போகிறார்கள், அது இனி உயிரோடிருக்கப்போகிறவர்களின் பிரச்சனை' என்று சுய சமாதானம் செய்துகொண்டேன். எரிப்பார்களா, புதைப்பார்களா என்ற குழப்பம் வேறு புதிதாய் சேர்ந்திருக்கிறது. ஒருவேளை மேலோகமிருந்து அதிலந்த பாம்பை கண்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்ள நினைத்துக்கொண்டேன். தலை சுற்றியது, உண்மையில் உடலே சுற்றியது. கட்டில், மெத்தை, வீடு என சகலமும் சுற்றியது. சுற்றியது என்பது சாதாரண வார்த்தை, புயல் வேகத்தில் சுற்றும் ராட்டினத்தில் படுத்திருப்பது போன்றதது. இந்த வீடும் இடமும் நானும் பூமிக்கு மேலே பூமியை விட அதிக வேகத்தில் தனித்து சுற்றிக் கொண்டிருந்தோம். முதலில் செயலிழந்தது கைகள், கால்களை நகர்த்த இயலவில்லை. கண்களை மூடி அதிக நேரம் ஆகி விட்டிருந்தது. காதுகளுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. மூளை மட்டும் உள்ளேன் ஐயா என்கிறது. அதுவும் கொஞ்ச நேரத்தில் ஆப்சென்ட் ஆகிவிடும். இப்போது சுழல்வது நின்று மெல்லமாய் மிதக்க ஆரம்பித்தேன். மூளை தன் சிந்தனையையும் கை கழுவி விட்டது. இனி முழுதாய் சாவதுதான் பாக்கி........